அஷ்வினுக்கு இடமில்லை
லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வரும் நான்காவது போட்டிக்கான இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதாவது, காயமடைந்திருக்கும் இஷாந்த் ஷர்மாவுக்கு பதிலாக உமேஷ் யாதவும், முகமது ஷமிக்கு பதிலாக ஷர்துல் தாகூரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணியின் பிளேயிங் லெவனில், ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி (c), அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பண்ட் (w), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால், இதில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அஷ்வினுக்கு மீண்டும் பிளேயிங் லெவன் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முதல் மூன்று போட்டியிலும் விளையாடிய ரவீந்திர ஜடேஜாவால், பந்துவீச்சில் துளி இம்பேக்ட் ஏற்படுத்த முடியவில்லை. ஒரு விக்கெட் எடுப்பதற்கே மிகவும் சிரமப்பட்டார். விக்கெட் விழுவாதது கூட பெரிய விஷயமல்ல. அவரது பவுலிங்கை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் எந்தவித சிரமும் இன்றி எதிர்கொண்டது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. எனினும், ஒரு அரை சதம் அடித்திருந்தார். அவரால் முடிந்த அளவுக்கு பேட்டிங்கில் பங்களிப்பு கொடுத்தார். ஆனால், பவுலிங்கில்....?
கோலி விளக்கம்
இந்த நிலையில் தான் ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் வெளிப்படையாக, அஷ்வின் பந்துவீச்சை எதிர்கொள்ள தயாராகி வருகிறோம் என்றே தெரிவித்தார். இந்திய அணியின் முன்னாள் லெஜண்ட் வீரர்கள் பலரும் அஷ்வின் அணியில் சேர்க்கப்பட வேண்டும் என்றே வலியுறுத்தினர். ஆனால், கோலி முடிவே இறுதி முடிவு என்பதால், அஷ்வின் வாய்ப்பு மீண்டும் மறுக்கப்பட்டது. இன்று காலை வரை அவருக்கு நிச்சயம் அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், கடைசி நேரத்தில் அவர் அணியில் இல்லை என்பது உறுதியானது. கேப்டன் கோலி இதுகுறித்து டாஸ் போட்ட பிறகு கூறுகையில், "இங்கிலாந்து அணியில் நான்கு இடது கை வீரர்கள் (பேட்ஸ்மேன்கள்) உள்ளனர். ஆகையால், அவர்களுக்கு ஜடேஜாவால் சிறப்பாக பந்து வீச முடியும். இந்த மேட்சில் அவர் அசத்த முடியும். எங்களது வேகப்பந்து வீச்சாளர்களும் ஓவர் தி விக்கெட் வந்து பந்து வீச முடியும். அதுமட்டுமின்றி, நம்பர்.7வது வீரராக அவர் களமிறங்குவது முக்கியமானது" என்று அஷ்வின் சேர்க்கப்படாததற்கு விளக்கம் கொடுத்தார்.
மைக்கேல் வாகன் ட்வீட்
இந்நிலையில், அஷ்வினுக்கு வாய்ப்பு வழங்காதது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தனது ட்விட்டரில், "இந்த போட்டியில் அஷ்வின் சேர்க்கப்படாதது என்பது, இதுவரை இங்கிலாந்தில் 4 டெஸ்ட் போட்டிகளில் நாம் கண்டறிந்த மிகப்பெரிய தேர்வுப் பிழையாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். அதாவது, இந்திய அணி அஷ்வினை தேர்வு செய்யாதது என்பது, இங்கிலாந்து மண்ணில் இதுவரை இந்தியா இழைத்த மிகப்பெரிய தவறாக இருக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் அவர் ட்வீட் செய்திருக்கிறார். மேலும், அஷ்வின் 413 டெஸ்ட் விக்கெட்டுகள் மற்றும் 5 டெஸ்ட் சதங்கள் அடித்திருப்பதையும் குறிப்பிட்டுள்ள வாகன், அஷ்வின் சேர்க்கப்படாதது இத்தொடரின் மிகப்பெரிய பைத்தியக்காரத்தனம்" என்று கூறியுள்ளார்.
ஓவர் நம்பிக்கை
மைக்கேல் வாகனின் இந்த டீவீட்டுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு பதில் டிவீட்கள் குவிந்து வருகின்றன. சிலர் வாகனின் கருத்துக்கு ஆதரவாக, "விராட் கோலி ஜடேஜா மீது அதீத நம்பிக்கையில் இருக்கிறார். விரைவில் அவர் உண்மையை உணர்ந்து கொள்வார்" என்று குறிப்பிட, சிலர் வாகனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதில், "இந்த பிட்ச் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானது. இன்னும் ஜடேஜா, அஷ்வின் எனும் இரண்டு ஸ்பின்னர்கள் அணியில் இருக்க வேண்டும் என்கிறீர்களா?" என்று கேள்வி எழுப்பியுள்ளனர். குறிப்பாக இதற்கு ரிப்ளை செய்துள்ள ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட்டர் மார்க் வாக், "இந்த நடவடிக்கை மூலம், இந்திய அணி ஏதேனும் சிறப்பாக செய்ய முடிந்தால், அப்போது உங்களுக்கு அது ஆச்சர்யமாக இருக்கும்" என்று பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.