காரணம் என்ன
பதவி விலகுவது குறித்து விளக்கம் அளித்திருந்த விராட் கோலி, பணிச்சுமை மற்றும் பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காகவும் தான் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்திருந்தார். ஆனால் விராட் கோலிக்கு, அணி வீரர்களிடம் இருந்தும், பிசிசிஐ நிர்வாகத்திடம் இருந்து வந்த அழுத்தம் காரணமாகவே அவர் பதவி விலகியதாக கூறப்படுகிறது.
அஸ்வின் தான் காரணமா
குறிப்பாக சீனியர் வீரர் ஒருவர் விராட் கோலியின் கேப்டன்சி குறித்து பிசிசிஐ-யிடம் குற்றச்சாட்டை முன்வைத்ததாக தகவல் வெளியானது. அந்த வீரர் வேறு யாரும் இல்லை, தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் தான். இந்த தகவலுக்கு ஏற்றார் போலவே கடந்த 2 வருடங்களாக அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுக்காமல் இருந்து வருகிறார் விராட்கோலி. எனவே அஸ்வின் தான் காரணம் என்பதை ரசிகர்கள் பரப்பி வந்தனர்.
புஜாரா, ரகானே
இந்நிலையில் அந்த சீனியர் வீரர் அஸ்வின் இல்லை என்றும் புஜாரா மற்றும் ரகானே ஆகியோர் தான் என புது பூகம்பம் கிளம்பியுள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பின்னர் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இந்த போட்டியில் புஜாரா முதல் இன்னிங்சில் 8 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 15 ரன்களும் எடுத்தார். ரகானே முதல் இனிங்ஸில் 49 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 15 ரன்களும் எடுத்தார். இதனால் இவர்கள் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.
குற்றச்சாட்டு
ஆனால் இந்த போட்டிக்கு பிறகு இவர்கள் இருவருமே பிசிசிஐ- யை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்போது, விராட் கோலியின் கேப்டன்சி சரியில்லை என்றும் அவரின் செயல்கள் சுத்தமாக பிடிக்கவில்லை என்பது போல குற்றம்சாட்டியுள்ளனர். இதனையடுத்து அனைத்து வீரர்களின் கருத்தையும் பிசிசிஐ தனித்தனியாக கேட்டுள்ளதாக தெரிகிறது. இதன் பிறகே விராட் கோலி பதவி விலக பிசிசிஐ ஒரு வகையில் அழுத்தம் கொடுத்திருந்ததாக தெரிகிறது.