பெரும் அச்சுறுத்தல்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சொதப்பிய பல வீரர்கள் தற்போது கார்னர் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில், மிக முக்கியமான ஒரு வீரர் என்றால் அது ஜஸ்ப்ரித் பும்ரா. இறுதிப் போட்டியில் இவர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. நம்பிக்கை இருந்தது. உலகின் தலைசிறந்த பவுலர்களில் ஒருவராக வலம் வருபவர் என்பதால், நியூசிலாந்து அணிக்கு நிச்சயம் பெரும் அச்சுறுத்தலாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எல்லாம் தலைகீழ் ஆனது.
இந்திய அணி ஷாக்
இதில் முதல் இன்னிங்ஸில் 26 ஓவர்கள் வீசிய பும்ரா 57 ரன்கள் கொடுத்தார். ஆனால், விக்கெட் கிடைக்கவில்லை. 2ம் இன்னிங்சிஸில் 10.4 ஓவர்கள் வீசி, 35 ரன்கள் கொடுத்தார். அதிலும் விக்கெட் விழவில்லை. இரு இன்னிங்ஸிலும் ஒரு விக்கெட் கூட அவரால் வீழ்த்த முடியவில்லை. விக்கெட் விழுவாதது கூட பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்றாலும், அவரது பந்துவீச்சை நியூசிலாந்து வீரர்கள் எந்தவித சிரமுமின்றி ஜாலியாக எதிர்கொண்டது தான் இந்திய அணி நிர்வாகத்தை அதிர்ச்சி அடைய வைத்தது. குறிப்பாக, கேப்டன் கோலிக்கு.
அவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு
இந்த நிலையில் தான், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில், முதல் போட்டியில் இருந்தே பாஸிட்டிவான மனநிலையில் இருக்கும் வீரர்களை மட்டும் தேர்வு செய்ய வேண்டும் என்பதில் கேப்டன் கோலி மற்றும் அணி நிர்வாகத்தினர் உறுதியாக இருக்கின்றனர். புரியும்படி சொல்லவேண்டுமெனில், களமிறங்கினால் 100 சதவிகிதம் ரிசல்ட் தருவதில் உறுதியாக உள்ளவர்களை மட்டும் தேர்வு செய்யலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாம். இந்த சூழலில், பும்ராவிடம் கேப்டன் கோலி ஆலோசனை நடத்தி இருப்பதாக தெரிகிறது.
கோலி எச்சரிக்கை
அதில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் போட்டியில் பும்ராவின் பவுலிங் திறன் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக, ஏன் ஷார்ட் பிட்ச் பந்துகள் அதிகம் வீச முடியவில்லை? என்பது குறித்து காரசாரமாகவே விவாதங்கள் நடைபெற்றதாக தெரிகிறது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்றதாக அறியப்படும் சின்ஹா மீட்டிங்கில் பும்ரா, கோலி மற்றும் கோச் சாஸ்திரி மற்றும் பங்குபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், முதல் போட்டியில் பும்ரா தன்னை நிரூபித்து ஆக வேண்டும் என்று கோலி கறாராக சொல்லியிருப்பதாக தெரிகிறது.