வில்வித்தை அசத்தல்
இன்று காலை முதன் முதலாக தொடங்கிய பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில், இந்தியாவின் இளவேனில் வாலறிவன் மற்றும் அபூர்வி சண்டேலா ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தனர். இதைத் தொடர்ந்து, வில்வித்தை போட்டிகள் தொடங்கின. இதில், கலப்பு அணிகள் பிரிவு வெளியேற்றுதல் சுற்றில், இந்தியாவின் பிரவீன் ஜாதவ் - தீபிகா குமாரி இணை காலிறுதிக்கு முன்னேறியது. இதில், 5-3 என்ற கணக்கில் சீன-தைபே அணியை வென்று இந்தியா காலிறுதிக்கு முன்னேறியது.
அடுத்தடுத்த வெற்றி
இதையடுத்து, இன்று காலை நடந்த ஹாக்கி போட்டி, ஆண்கள் பிரிவில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில், 3-2 என்று கோல் கணக்கில் இந்தியா அபாரமாக வெற்றிப் பெற்று தனது புள்ளிகள் கணக்கை தொடங்கியது. துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா வெளியேறினாலும், வில்வித்தை, ஹாக்கி ஆகியவற்றில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு இந்திய அணி முன்னேறியது.
சுஷிலா தேவி
இந்நிலையில், ஜுடோ போட்டிகள் இன்று காலை தொடங்கின. இதில், இந்தியாவின் சார்பில் பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவில், சுஷிலா தேவி களமிறங்கினார். இவர் ஹங்கேரியின் எவா செர்னோ விக்கியுடன் (Eva Csernoviczki) மோதினர். இந்தியா சார்பில் ஜுடோ விளையாட்டில் கலந்து கொண்ட ஒரே வீரர், வீராங்கனை சுஷிலா மட்டும் தான். இதனால், அவர் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது.
ஏமாற்றம்
கிளாஸ்கோவில் கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்று நம்பிக்கையை ஏற்படுத்தியவர் சுஷிலா. தனது 7 வயது முதல் ஜுடோ போட்டியில் தீவிரமாக பயிற்சி பெற்று வரும் சுஷிலா, வெள்ளிப்பதக்கம் வென்ற போது அவரது வயது ஜஸ்ட் 18. அப்போது முதல் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வருகின்றார். இப்படி ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் அவர் மீது இருந்தன. ஆனால், இந்தியாவின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும் வெகு விரைவில் முடிவுக்கு வந்துவிட்டது. ஹங்கேரியின் எவா செர்னோவிடம் தோல்வியடைந்து சோகத்துடன் வெளியேறினார் சுஷிலா.