பார்ல்: இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அவர் முக்கிய தொடர் ஒன்றில் பங்கேற்க முடியாமல் போயுள்ளது.
இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.
கிரிக்கெட் உலகில் ஏற்கனவே சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், குறைந்த அறிகுறிகளுடன் தனக்கு கொரோனா உறுதியாகியுள்ளது என்றும் சரியான வழிமுறைகளுடன் வீட்டிற்குள்ளேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை எடுத்துக்கொள்ளுங்கள் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
ஹர்பஜன் சிங், நேற்று தொடங்கிய லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதாக இருந்தது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் ஹர்பஜன் ஒப்பந்தமாகியிருந்த இந்தியா மஹாராஜாஸ் அணி மற்றும் ஏசியா லையன்ஸ் அணிகள் மோதின. இதில் எங்கு ஹர்பஜனை காணவில்லை என ரசிகர்கள் தேடினர். ஆனால் கொரோனா காரணமாக அவர் போட்டிகளுக்காக புறப்படவே இல்லை எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
41 வயதாகும் ஹர்பஜன் சிங், கடந்தாண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இதுவரை அவர் 103 டெஸ்ட், 236 ஒருநாள் கிரிக்கெட், 28 டி20 என மொத்தமாக விளையாடி 367 போட்டிகளில் விளையாடி 711 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். சமீபத்தில் உள்நாட்டு தொடர்களில் இருந்தும் ஓய்வு பெற்ற அவர் பயிற்சியாளர் அவதாரம் எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“4 முக்கிய விஷயங்கள்” 2வது ஒருநாள் போட்டி.. இந்தியாவின் வெற்றிக்கு என்ன தேவை - முழு விவரம்!