டெல்லியின் ஓப்பனிங்
ஓப்பனிங் வீரர்கள் ஷிகர் தவான் தொடக்கம் முதலே அதிரடி காட்டி வந்த சூழலில், தவறான ஷாட்டால் அவுட்டாகி வெளியேறினார். 20 பந்துகளை சந்தித்த ஷிகர் தவான் 5 பவுண்டரிகளை விளாசி 24 ரன்களுக்கு அவுட்டானார். இதன் பின்னர் வந்த நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் 1 ரன் மட்டுமே எடுத்து நடையை கட்டினார். சுனில் நரேன் வீசிய பந்தில் போல்ட் அவுட்டானார்.
குறைந்த இலக்கு
இதன் பின்னர் வந்த வீரர்களில் கேப்டன் ரிஷப் பண்ட்-ஐ தவிர வேறு எந்த வீரரும் இரட்டை இலக்க ரன்களை கூட அடிக்கவில்லை. ஹெட்மெயர் (4), லலித் யாதவ் (0), அக்ஷர் படேல் (0), ரவிச்சந்திரன் அஸ்வின் (9), ஆவேஷ் ஐயர் (5) என அடுத்தடுத்து அனைவரும் வெளியேறினர். இறுதிவரை போராடிய ரிஷப் பண்ட் 36 பந்துகளில் 39 ரன்களை எடுத்து அவுட்டானார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்தது.
சிறந்த தொடக்கம்
128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்த போதும், அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அதிரடியாக ஆடிய தொடக்க வீரர் சுப்மன் கில் 30 ரன்களுக்கும், வெங்கடேஷ் ஐயர் 14 ரன்களுக்கும் வெளியேறினர். இதனால் 43 ரன்களுக்கு 2 ரன்களை இழந்து தடுமாறியது கொல்கத்தா அணி. அதன் பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர்.
ராகுல் திரிபாதி (9), மோர்கன் (0), தினேஷ் கார்த்திக் (12) என மூத்த வீரர்கள் அனைவரும் வந்த வேகத்தில் வெளியேறினர்.
அபார வெற்றி
மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய நிதிஷ் ராணா நிதானமாக ரன்களை உயர்த்தி வந்தார். இதனால் கடைசி 5 ஓவர்களில் அந்த அணிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் நட்சத்திர வீரர்கள் அனைவரும் அவுட்டாகிவிட்டனர். அப்போது மிகப்பெரும் திருப்புமுனையை கொடுத்தார் சுனில் நரேன். ரபாடா வீசிய 16வது ஓவரில் 2 சிக்ஸர், 1 பவுண்டரி என விளாசி ஆட்டத்தை சுலபமாக்கி கொடுத்தார். இதனால் அந்த அணி 18.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 130 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த நிதிஷ் ராணா 36 ரன்களை எடுத்திருந்தார்.