ஏமாற்றிய ஆர்சிபி அணி
இந்த சீசனில் தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக விளையாடி வந்த ஆர்சிபி அணி அமீரகத்திற்கு மாற்றப்பட்டதில் இருந்து சற்று சறுக்கலை சந்தித்தது. இதனால் ப்ளே ஆஃப்-க்குள் நுழைவதற்கு 3வது இடம் மட்டுமே கிடைத்தது. கடைசி லீக் போட்டியில் முதலிடம் வகிக்கும் டெல்லி அணியையே வீழ்த்திய ஆர்சிபி நேற்று நடைபெற்ற முதல் குவாலிஃபயர் போட்டியில் கொல்கத்தா அணியிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.
கோலி கேப்டன்சி
இதனையடுத்து விராட் கோலியின் கேப்டன்சி பதவி முடிவுக்கு வந்தது. இந்த தொடருடன் ஆர்சிபி அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக கோலி அறிவித்திருந்தார். இதனால் தற்போது அடுத்த கேப்டனாக யார் இருப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 37 வயதாகும் டிவில்லியர்ஸ் அடுத்த ஐபிஎல்-ல் பங்கேற்பாரா என்பதிலேயே சந்தேகம் நீடித்து வருவதால், அவர் கேப்டனாக நியமிக்கப்படமாட்டார் எனத் தெரிகிறது.
அடுத்த கேப்டன் பொல்லார்ட்?
இதனால் வேறு அணியில் இருக்கும் முக்கிய வீரர்களுக்கு ஆர்சிபி அணி வலைவிரித்து வருகிறது. இதற்கு முன்னர் மும்பை அணி கெயீரன் பொல்லார்டிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், அதற்கு பொல்லார்ட் ஒப்புக்கொள்ளவில்லை எனவும் தகவல் வெளியானது.
ராகுலுடன் பேச்சுவார்த்தை
இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுலை, ஆர்சிபி அணியின் கேப்டனாக நியமிப்பதற்கு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளது. இதில் உடன்பாடும் எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கே.எல்.ராகுலின் தலைமையில் இந்தாண்டு பஞ்சாப் அணி ப்ளே ஆஃப்-க்கு அருகில் வரை சென்று வெளியேறியது. இதுமட்டுமல்லாமல் அவரின் பேட்டிங்கும் சிறப்பாக இருப்பதால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருப்பதாக தெரிகிறது.
ஆர்சிபி பயணம்
கே.எல்.ராகுல் ஏற்கனவே ஆர்சிபி அணிகாக விளையாடியவர் தான். கடந்த 2013ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை ஆர்சிபி அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருந்து வந்தார். பின்னர் பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது. இந்நிலையில் மீண்டும் ஆர்சிபி அணிக்கே அவர் திரும்பவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.