கொல்கத்தா: டோணி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பையை வெல்லும் என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
அணி மற்றும் வீரர்கள் நிலவரத்தை சரியாக கணிப்பதில் பெயர் பெற்ற கங்குலி இதுகுறித்து அளித்த பேட்டி: உலக கோப்பை நடப்பு சாம்பியன் நாம்தான். அந்த பட்டத்தை தக்க வைத்துக்கொள்ளும் தகுதி இந்தியாவுக்கு உள்ளது. எந்த நாட்டில் விளையாடினாலும் இந்தியா தலை சிறந்த கிரிக்கெட் அணி என்பதை மறுக்க முடியாது.
வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தோல்வியுற்று வருவது கவலைக்குறிய விஷயம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதே நேரம், ஒருநாள் போட்டிகள் குறித்து நாம் கவலைப்பட தேவையில்லை. எனவே ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இணைந்து நடத்தும் உலக கோப்பையிலும் சிறந்த ஆட்டத்தை இந்தியா வெளிப்படுத்தும்.
உலக கோப்பை அடுத்த ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மைதானங்களில் நடக்க உள்ளது. முன்னதாக இந்திய அணி வரும் நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகள், இங்கிலாந்துடனான முத்தரப்பு ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இது நீண்ட சுற்றுப்பயணமாகும். இதனால் ஆஸ்திரேலியாவின் பிட்ச், தட்பவெப்பத்திற்கு இந்திய வீரர்கள் பழகிக்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
வீரர்கள் தங்களுக்கு ஓய்வு இல்லை என்று நினைக்க கூடாது. ஆஸ்திரேலிய தொடர் முடிந்த பிறகு உலக கோப்பை தொடங்க இரு வாரங்கள் ஓய்வு கிடைக்கும். இந்த காலகட்டத்தில் இந்த ஓய்வே போதுமானது. இவ்வாறு சவுரவ் கங்குலி தெரிவித்தார்.