மும்பை: கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள விரேந்தர் ஷேவாக் இந்தியாவின் விவியன் ரிச்சர்ட்ஸ் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் அனுராக் தாகுர் தெரிவித்துள்ளார்.
அதிரடி பேட்டிங் செய்வதற்கு பெயர் போன விரேந்தர் ஷேவாக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சர்வதேச அளவில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்தவர் ஷேவாக்.
அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை தனது 37வது பிறந்தநாள் அன்று அறிவித்தார். இந்நிலையில் ஷேவாக் பற்றி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சஷாங் மனோகர் கூறுகையில்,
தனது சகாக்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஒரு சிறந்த முன் உதாரணம் ஷேவாக். அவர் தனக்கே உரிய பேட்டிங் ஸ்டைலால் உலக கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்தார். பந்துவீச்சாளர்களால் அஞ்சப்பட்ட பேட்ஸ்மேன்களில் அவரும் ஒருவர் என்றார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் அனுராக் தாகுர் கூறுகையில்,
அருமையாக விளையாடிய ஷோவாகிற்கு எனது வாழ்த்துக்கள். அவர் பேட்டிங்கிற்கு புது அர்த்தம் அளித்தவர். நாட்டிற்கு பெருமை தேடிக் கொடுத்தவர். அவர் பந்துகளை பிரித்து மேயும் இந்தியாவின் சர் விவியன் ரிச்சரட்ஸ். அவரது எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் என்றார்.