மும்பை : ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் முதல் நான்கு அணிகளில் ஒன்றாக இடம் பெற மும்முரமாக உள்ள மும்பை சிட்டி எஃப்சி அணி, ஜாம்ஷட்பூர் எஃப்சி அணியை மும்பை ஃபுட்பால் அரீனாவில் களம் காண்கிறது.
நான்காம் இடம் பெற சென்னையின் எஃப்சி உடன் கடும் போட்டியில் உள்ள மும்பை சிட்டி அணிக்கு வியாழனன்று நடைபெற உள்ள ஆட்டம் மிக முக்கியமான ஒன்றாகும். பலம் கொண்ட எஃப்சி கோவா மற்றும் சென்னையின் எஃப்சி அணிகளுடன் மோதிய கடந்த இரு ஆட்டங்களும் மிகவும் சவாலாக அமைந்து விட்டதால், ஜார்ஜ் கோஸ்டா தலைமையிலான மும்பை அணி தனது திறமையை ஜாம்ஷெட்பூருக்கு எதிராக காட்டியே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
"ஜெயிப்பது ஒன்றைத் தவிர எங்களுக்கு வேறு எந்த வழியும் இல்லை. ஜாம்ஷெட்பூர் அணியை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் அதே சமயம், எங்களுக்கு தேவையான மூன்று புள்ளிகளை எடுக்க மிகவும் கவனமாக உள்ளோம். நாங்கள் ஆடும் முறைகளில் சிறு சிறு மாற்றங்கள் செய்து இருந்தாலும் பெரிதாக எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. ஒருங்கிணைந்த முயற்சியுடன் கட்டாயம் வெற்றி பெறுவோம்," என்கிறார் கோஸ்டா.
சொந்த மண்ணில் நடைபெற்ற கடந்த 2 ஆட்டங்களில் சிறப்பாக விளையாடிய மும்பை அணி, அந்த ஆட்டங்களில் வெற்றி பெற்றதோடு மட்டுமில்லாமல் எதிரணியினரை பெரிதாக கோல் அடிக்க விடவே இல்லை. ரவுலின் போர்கஸ் மற்றும் டியாகோ கார்லோஸ் ஆகியோர் அந்த அணிக்கு வலு சேர்க்கின்றனர். மோடோ சோகோ தற்போது அணியில் இல்லை என்ற போதிலும் மற்ற வீரர்கள் திறம்பட விளையாடி மும்பை அணியின் வெற்றிக்கு வழி வகுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏடிகே உடனான தோல்விக்கு பிறகு மும்பையை களம் காணும் ஜாம்ஷெட்பூர் அணி, தற்போது 16 புள்ளிகளுடன் பட்டியலில் ஏழாம் இடத்தில் உள்ளது. எனவே டாப் 4 அணிகளில் ஒன்றாக இடம்பெறுவதற்கு நடைபெறும் போட்டியில் இருந்து ஜாம்ஷெட்பூர் எஃப்சியை முற்றிலும் விலக்கிவிட முடியாது.
ஆனால் இரியாண்டோ தனது அணியினரிடம் இருந்து இன்னும் சிறப்பான ஆட்டத்தை எதிர்பார்க்கும் நிலையில் உள்ளார். செர்ஜியோ காஸ்டல், நோவ் அகோஸ்டா மற்றும் காயம்பட்ட பின் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள பிடி ஆகியோர் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிக்கு உதவுவார்கள் என்று நம்பப்படுகிறது.
"வாய்ப்புகளை வெற்றிகளாக மாற்ற நாங்கள் முழுமூச்சுடன் உள்ளோம். வாய்ப்புகளை உருவாக்கவும் நாங்கள் தவற மாட்டோம். வெற்றியை எதிர்நோக்கி நாங்கள் இருக்கிறோம்," என்கிறார் இரியாண்டோ.
எதிரணியினருக்கு எக்கச்சக்க கோல்களை கடந்து ஆட்டங்களில் வாரி வழங்கியுள்ள ஜாம்ஷெட்பூர், அதை கட்டுப்படுத்தியே ஆக வேண்டிய நிலையில் உள்ளது. டிரி டீமில் இல்லாதது அந்த அணிக்கு ஒரு குறையாகவே உள்ளது.
"உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்களை கொண்ட மும்பை ஒரு சிறந்த அணி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. சௌகவ் போன்ற வெளிநாட்டு வீரர் இல்லாத போதிலும் அந்த அணியில் வேறு சிறப்பான ஆட்டக்காரர்கள் உள்ளார்கள். என்றாலும் நாங்கள் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வோம்," என்கிறார் இரியாண்டோ. மும்பை எஃப்சி மேலே செல்லுமா, அல்லது ஜாம்ஷெட்பூர் எஃப்சி ஜெயிக்குமா?
Photos Courtesy : ISL Media