பயிற்சியாளர்
இந்த ஒலிம்பிக் தொடரில் இந்திய டேபிள் டென்னிஸ் குழுவுடன் சவுமியாதீப் ராய் டோக்கியோ சென்று இருந்தார். ஒட்டுமொத்த குழுவுக்கும் இவர் தான் பயிற்சியளிக்க நியமிக்கப்பட்டிருந்தார். இந்திய விதிப்படி சவுமியாதீப் ராய் மட்டுமே டேபிள் டென்னிஸ் வீரர்களுக்கு போட்டி நடக்கும் களத்தில் ஆலோசனை வழங்க முடியும். வீரர், வீராங்கனைகளின் தனிப்பட்ட பயிற்சியாளர்கள் போட்டி நடக்கும் அரங்கிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்,
மணிகாவின் கோரிக்கை
ஆனால் டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா தனது தனிப்பட்ட பயிற்சியாளர் சன்மாயை பரன்ஜாபாயை போட்டி நடக்கும் களத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டு இருக்கிறார். ஆனால் மணிகா பத்ராவின் தனி பயிற்சியாளரை இந்திய ஒலிம்பிக் கமிட்டி போட்டி நடக்கும் களத்திற்குள் அனுமதிக்கவில்லை. வெளியே பயிற்சி கொடுக்க மட்டுமே அனுமதித்தது. தேசிய பயிற்சியாளர் சவுமியாதீப் ராயிடம் ஆலோசனை பெறுமாறு மணிகாவிற்கு உத்தரவிடப்பட்டது.
அதிருப்தி
இதனால் அதிருப்தியடைந்த மணிகா களத்தில் தேசிய பயிற்சியாளர் சவுமியாதீப் ராயிடம் எந்த ஆலோசனையும் பெறவில்லை. வெளியே தனிப்பட்ட பயிற்சியாளர் சன்மாயிடம் பெற்ற ஆலோசனைகளை வைத்தே மணிகா போட்டியில் ஆடி இருக்கிறார். இது பெரும் சர்ச்சையை கிளப்ப, மணிகா பத்ரா இதுகுறித்து விளக்கம் அளிக்க தேசிய டேபிள் டென்னிஸ் கமிட்டி நோட்டீஸ் அனுப்பியது.
சர்ச்சை கிளப்பிய மணி
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்த விசாரணையில் மணிகா புதிய பூகம்பத்தை கிளப்பியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், போட்டியின் போது நான் ராயை புறக்கணித்ததற்கு பின்னால் முக்கிய காரணம் உள்ளது. கடந்த மார்ச் மாதம் தோஹாவில் ஒலிம்பிக்கிற்கான தகுதிப்போட்டிகள் நடைபெற்றது. அப்போது பயிற்சியாளர் ராய் தனது மாணவி ஒருவர் ஒலிம்பிக்கில் தகுதி பெற வேண்டும் என்பதற்காக என்னை போட்டியில் மோசமாக விளையாடி தோற்றுவிடுமாறு கூறினார். நான் சிறப்பாக விளையாடினா, அந்த வீராங்கனைக்கு வாய்ப்பு கிடைக்காது என்பதால் தோற்றுவிடுமாறு வற்புறுத்தினார்.
தைரியமான முடிவு
ஆனால் நான் அதனை செய்யவில்லை. எனவே அந்த கோபத்தில் இருந்த பயிற்சியாளர் ராய், ஒலிம்பிக் போட்டியின் போது வேண்டுமென்றே எனக்கு தவறான ஆலோசனைகளை வழங்கி தோற்க வைக்க விரும்பினார். அதற்காகவே அவரின் அலோசனைகளை புறக்கணித்து, சுயேட்சியாக நானே விளையாடினேன்.
ஆதாரங்கள் உள்ளது
இதற்கான ஆதராங்கள் என்னிடம் உள்ளது. அதனை எப்போது வேண்டுமானாலும் சமர்பிக்க தயாராக உள்ளேன். ஹோட்டல் அறையில் என்னிடம் அவர் 20 நிமிடங்களுக்கும் மேலாக பேசினார், வற்புறுத்தினார். அதனை நான் நிரூபிப்பேன். என்மீது எந்த தவறும் இல்லை என மணிகா பத்ரா தெரிவித்துள்ளார்.