எதிர்பாராத சம்பவங்கள்
2020 ஐபிஎல் தொடருக்கு முன் சிஎஸ்கே அணியில் பல்வேறு எதிர்பாராத சம்பவங்கள் நடந்தேறின. துபாயில் இரண்டு வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. மொத்தம் 13 பேர் பாதிப்புக்கு உள்ளானதால் சிஎஸ்கே அணியின் பயிற்சி திட்டம் தடம் புரண்டது.
சுரேஷ் ரெய்னா விலகல்
அடுத்து அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா திடீரென இந்தியா கிளம்பிச் சென்றார். அவர் 2020 ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதாக சிஎஸ்கே அணி அறிவித்தது. ரெய்னா மீண்டும் அணியில் இணைவாரா? இல்லையா? என்பதில் பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன.
ரெய்னா பயிற்சி
சுரேஷ் ரெய்னா இந்தியாவிலேயே பயிற்சி செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், எப்போது வேண்டுமானாலும் தான் சிஎஸ்கே அணியுடன் இணைவேன் எனவும் கூறி இருக்கிறார். ஆனால், சிஎஸ்கே நிர்வாகத்திடம் இருந்து அது குறித்து எந்த சலனமும் இல்லை.
ரெய்னா மீண்டும் இணையக் கூடும்
சிஎஸ்கே அணி சுரேஷ் ரெய்னா 2020 ஐபிஎல் தொடரை விட்டு விலகி இருக்கும் பட்சத்தில் மாற்று வீரர் ஒருவரை தேர்வு செய்ய முடியும். சிஎஸ்கே நிர்வாகம் இதுவரை மாற்று வீரரை தேர்வு செய்யவில்லை. அதை வைத்துப் பார்த்தால் ரெய்னா தொடரின் பாதியில் அணியில் இணையக் கூடும் என சிலர் கூறி வருகின்றனர்.
ரெய்னாவுக்கு மாற்று வீரர்
அதே சமயம், வெளியில் இருந்து மாற்று வீரர்களை தேர்வு செய்யாவிட்டாலும் அணியில் இருக்கும் வீரர்களையே சிஎஸ்கே ரெய்னாவுக்கு மாற்றாக ஆட தயார் செய்து வருவதாகவே சிஎஸ்கே அணி வட்டாரம் கூறி வருகிறது. அதில் ஒருவர் தான் அந்த தமிழக வீரர் முரளி விஜய்.
முக்கிய வீரர் இல்லை
முரளி விஜய் கடந்த சில சீசன்களில் சிஎஸ்கே அணியில் முக்கிய வீரராக இடம் பெறவில்லை. எந்த வீரருக்காவது காயம் ஏற்பட்டாலோ, அணியில் பேட்டிங்கில் கூடுதல் இந்திய வீரர் தேவை எனும் நிலை ஏற்பட்டாலோ மட்டுமே களமிறங்கும் அணியில் தேர்வு செய்யப்படுவார்.
கன் பிளேயர்
இந்த நிலையில், சுரேஷ் ரெய்னாவுக்கு மாற்றாக முரளி விஜயை சிஎஸ்கே அணி தயார் செய்து வருகிறது என்ற தகவலை ஷேன் வாட்சன் பேச்சு வாக்கில் ஒரு பேட்டியில் கூறி உள்ளார். அதில் முரளி விஜய்யை "கன் பிளேயர்" (Gun player) என குறிப்பிட்டு பாராட்டி உள்ளார்.
அதிக வாய்ப்புக்கள் கிடைக்கும்
"சுரேஷ் ரெய்னா இல்லாதது சந்தேகமின்றி பெரிய இழப்பு தான். ஆனால், எங்களிடம் முரளி விஜய் போன்ற கன் பிளேயர் இருக்கிறார். அவருக்கு கடந்த சில ஆண்டுகளில் டி20 போட்டிகளில் அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், அவர் மிகவும் நல்ல பேட்ஸ்மேன். இந்த ஆண்டு அவருக்கு அதிக வாய்ப்புக்கள் கிடைக்கும்" என்றார் வாட்சன்.
என்ன திட்டம்?
இதன் மூலம், சிஎஸ்கே அணி முரளி விஜய்யை ரெய்னாவுக்கு மாற்றாக தயார் செய்து வருவது உறுதி ஆகி உள்ளது. அவர் அனைத்து போட்டிகளிலும் ஆடா விட்டாலும் அணியின் சம நிலைக்கு ஏற்ப சில போட்டிகளை தவிர மற்ற போட்டிகளில் ஆடுவார் என எதிர்பார்க்கலாம்.
ருதுராஜ் கெயிக்வாட்
இளம் வீரர் ருதுராஜ் கெயிக்வாட்டையும் சிஎஸ்கே அணி தயார் செய்து வருவதாக கூறப்படுகிறது. முரளி விஜய்யை அதிக போட்டிகளில் ஆட வைக்கும் பட்சத்தில் அவருக்கு சில போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். இதுதான் சிஎஸ்கே திட்டம் என்றால், சுரேஷ் ரெய்னா மீண்டும் சிஎஸ்கே அணிக்கு திரும்ப மாட்டாரா?