— Aditya Das (lodulalit001) March 26, 2021 |
இந்திய அணி
நேற்று நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி கடின இலக்கை நிர்ணயித்தபோதும் இங்கிலாந்து சிறப்பான பேட்டிங்கால் போட்டியை வென்றது. இந்திய அணியில் விராட் கோலி,கே.எல்.ராகுல் ஆகியோர் சிறப்பாக ஆடிய போதும், ரிஷப் பண்டின் அதிரடி ஆட்டம் தான் இந்திய அணி 336 ரன்களுக்கு வேகமாக அழைத்துச் சென்றது.
அவுட்
போட்டியின் போது ரிஷப் பண்ட்-க்கு 2 முறை அவுட் கொடுக்கப்பட்டு பின்னர் DRS முறையால் மீண்டு வந்தார். அதில் ஒரு DRS தான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆட்டத்தின் 40வது ஓவரில் டாம் கரண் வீசிய பந்து ரிஷப் பண்ட் பேட்டில் பட்டு கீப்பர் திசையில் பவுண்டரிக்கு சென்றது. ஆனால் பந்து அவரின் காலில் பட்டது எனக்கூறி முதலில் அவருக்கு LBW அவுட் கொடுக்கப்பட்டது. ஆனால் பண்ட் உடனடியா DRS கேட்டதால், ரிவ்வியூவில் அப்பந்து முதலில் பேட்டில் பட்டது தெரியவந்து நாட் அவுட் கொடுக்கப்பட்டது. எனினும் அந்த பவுண்டரிக்கு ரன்கள் கொடுக்கப்படவில்லை.
ஐசிசி விதிமுறை
ஐசிசியின் DRS விதிமுறைபடி, பேட்ஸ்மேனுக்கு முதலில் கள நடுவரால் அவுட் கொடுக்கப்பட்டு பின்னர் டி.ஆர்.எஸ் முறையால் நாட் அவுட் கொடுக்கப்பட்டால், அந்த பந்தில் நடந்த எந்த ஒரு விஷயமும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. அந்தவகையில் பேட்ஸ்மேன் அடித்த ரன்களும் அவருக்கு கொடுக்கப்படாது.
ஆகாஷ் சோப்ரா
இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, நடுவர்களின் தவறால் ரிஷப் பண்ட்-க்கு 4 ரன்கள் போய்விட்டது. 101010364 முறையாக ( கிண்டலாக) தொடர்ந்து இப்படி தவறு நடக்கிறது. ஒரு வேளை இது உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நடந்திருந்தால் என்னவாகியிருக்கும். அதுவும் பேட்டிங் அணிக்கு 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இப்படி ஆகியிருந்தால் என்ன ஆகும்? என அதிருப்தி தெரிவித்துள்ளார்.