இங்கிலாந்து தொடர்
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் மற்றும் டி20 தொடரை இழந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒரு நாள் போட்டி தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. எனவே வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டி இன்று புனேவில் தொடங்கவிருக்கிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
அடுத்தடுத்து விக்கெட்
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் ரோகித் - ஷிகர் தவான் ஆகியோர் நிதானமாக ஆடினர். எனினும் இந்த ஜோடியை அடில் ரஷித் பிரித்தார். இதனால் ரோகித் சர்மா 37 ரன்களுக்கும், மற்றொரு தொடக்க வீரரான ஷிகர் தவான் 67 ரன்களுக்கும் அவுட்டாகி வெளியேறினர். இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் கோலி (7) மற்றும் கே.எல்.ராகுல் (7) ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு வெளியேறியதால் இந்திய அணி தடுமாறியது.
அதிரடி ஜோடி
இதனையடுத்து ஜோடி சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர்கள் ரிஷப் பண்ட் - ஹர்த்திக் பாண்டியா ஆகியோர் இங்கிலாந்து பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். அதிரடி ஆடிய ரிஷப் பண்ட் 62 பந்துகளில் 78 அடித்து அவுட்டானார். அதே போல் மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஹர்த்திக் 44 பந்துகளில் 64 ரன்களை விளாசி பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இலக்கு
பின்னர் களமிறங்கிய க்ருணால் பாண்டியா (25),ஷர்துல் தாக்கூர் ( 30) என சீரான இடைவெளியில் வெளியேற, இந்திய அணி 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 329 ரன்களை குவித்தது. இங்கிலாந்து தரப்பில் சிறப்பாக பந்துவீசிய மார்க் வுட் 3 விக்கெட்கள், அடில் ரஷித் 2 விக்கெட்டும் மற்றவர்கள் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். இதனையடுத்து 330 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து ஆடி வருகிறது.