ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா வெற்றி
கடந்த 2018ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த தொடரை இந்தியா வெற்றி கொண்டது. கடந்த 1995 முதல் தன்னுடைய சொந்த மண்ணில் எந்த அணியையும் ஆஸ்திரேலியா வெற்றி கொள்ள அனுமதித்ததில்லை. அந்த அணியுடன் மோதி நியூசிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட எந்த அணியும் அந்த நாட்டில் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லாத நிலை இருந்தது.
காரணம் கூறிய வாக்கர் யூனிஸ்
இந்நிலையில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடை பெற்றிருந்த டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் ஆஸ்திரேலிய அணியில் இல்லாத காரணத்தாலேயே இந்தியாவால் ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடிந்தது என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டனும் தற்போதைய அணியின் பௌலிங் பயிற்சியாளருமான வாக்கர் யூனிஸ் தெரிவித்துள்ளார்.
வாக்கர் யூனிஸ் விளக்கம்
இதேபோல ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணி மோதும்போதெல்லாம், ஒன்று பௌலர்கள் சொதப்புவார்கள் அல்லது ஆட்டக்காரர்கள் சொதப்புவார்கள். இதனால், வெற்றி என்பது அந்த அணியுடன் எப்போதுமே சாத்தியமில்லாமல் உள்ளதாகவும் வாக்கர் யூனிஸ் விளக்கமளித்துள்ளார். இதேபோல தான் இந்தியாவும் அந்த அணியுடனான போட்டிகளில் வெற்றிபெற தொடர்ந்து போராடி வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
கொரோனாவால் பாதிப்பு
இந்நிலையில், ஜூன் -ஜூலை மாதங்களில் திட்டமிடப்பட்டிருந்த இங்கிலாந்து அணியுடனான பாகிஸ்தானின் டெஸ்ட் தொடரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரத்தாகியுள்ளதற்கு வாக்கர் யூனிஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். எப்போதும் பாகிஸ்தான் அணி, இங்கிலாந்துடன் சிறப்பாக விளையாடும் என்று கூறியுள்ள யூனிஸ், இந்த தொடர் ரத்தானதால் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
வாக்கர் யூனிஸ் உறுதி
பாகிஸ்தானின் தலைமை பயிற்சியாளர் மற்றும் தலைமை தேர்வாளர் மிஸ்பா உல் ஹக்குடன் பணியாற்றுவதில் தனக்கு எந்த ஈகோவும் இல்லை என்றும் யூனிஸ் தெரிவித்துள்ளார். ஜஸ்டின் லாங்கர், கேரி கிர்ஸ்டன், ஆன்டி ப்ளவர் போன்ற பயிற்சியாளர்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்றியுள்ளதை எடுத்துக் காட்டியுள்ள யூனிஸ், இதேபோல தானும் அணியின் வெற்றிக்காக மிஸ்பாவுடன் இணைந்து பணியாற்றுவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.