சௌதாம்ப்டன் : இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா தன் முதல் இன்னிங்க்ஸில் 273 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியை விட 27 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றது.
இந்திய பேட்ஸ்மேன்களில் புஜாரா மட்டுமே பொறுப்பாக ஆடினார். அவர் 132 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்ற பேட்ஸ்மேன்களில் கோலி மட்டுமே 46 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
அதில் அஸ்வின் மற்றும் பண்டியா ஆட்டமிழந்த விதம் குறித்து இந்தியாவின் துணை பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் விமர்சித்து உள்ளார். அவர்கள் எளிமையான முறையில், பொறுப்பில்லாமல் ஆட்டமிழந்ததாக கூறி இருக்கிறார்.
இது பற்றி சஞ்சய் பங்கர், அவர்கள் இருவரின் ஆட்டமிழப்பும் மிக எளிதானது. ஹர்திக் ஆட்டமிழந்த பந்தில் அவர் பேட் பந்தின் மீதே சரியாக படவில்லை. அஸ்வின் களத்தில் இறங்கிய சிறிது நேரத்திலேயே ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய முயற்சி செய்தார். அவர் ஒருவேளை நன்றாக களத்தில் நிலைநிறுத்திக் கொண்டபின், பின்வரிசை வீரர்களோடு ஆடும் பட்சத்தில் அது போன்ற ஷாட்களை முயற்சி செய்திருக்கலாம் என தெரிவித்தார்.
அதே சமயம், புஜாராவை பாராட்டியுள்ளார் பங்கர். புஜாரா நன்றாக முன்னேறி இருப்பதாக கூறியுள்ளார். அவர் தான் எங்கே தோற்கிறோம் என கண்டு, அவற்றை பயிற்சி மூலம் சரி செய்தார். அதன் பலனை இப்போது அனுபவித்து வருகிறார் என கூறினார்.
இன்னும் இந்த தொடரில் மூன்று இன்னிங்க்ஸ் இருக்கிறது. புஜாரா இதே போல ஆடினால், இந்தியாவை வெற்றி வைப்பார் என தன் கருத்தை கூறினார். இந்தியா நான்காவது மற்றும் ஐந்தாவது டெஸ்டை வென்றால் தான் தொடரைக் கைப்பற்ற முடியுமென்பது குறிப்பிடத்தக்கது.