டி20 கேப்டன்சி
இந்தாண்டு நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணியை ரோகித் சர்மா தயார் செய்து வருகிறார். மறுபுறம் 2024ல் வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயார் ஆகும் வகையில் தான் இளம் படையை ஹர்திக் பாண்ட்யாவின் கையில் ஒப்படைத்தனர். அதற்கேற்றார் போலவே இலங்கை, நியூசிலாந்து தொடர்களில் வெற்றியை தேடிக்கொடுத்துள்ளார்.
பவுலிங் ஆசைகள்
இந்நிலையில் கேப்டன்சியை பயன்படுத்தி ஹர்திக் பாண்ட்யா சுயநலமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டிற்கு முதல் காரணம் அவரின் பவுலிங் தான். வழக்கமாக மிடில் ஓவர்களில் வரும் பாண்ட்யா தற்போதெல்லாம் வீசினால், முதல் ஓவரை தான் வீசுவேன் என அடம்பிடிக்கிறார். உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், ஷிவம் மாவி போன்ற முழு நேர வேகப்பந்துவீச்சாளர்கள் உள்ள போதும் இவர் முன் சென்றுவிடுகிறார்.
பவுலர்கள் புறகணிப்பு
இதே போல பிட்ச் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தாலும் சரி, வேகப்பந்துவீச்சுக்கு சாதகமானாலும் சரி, பாண்ட்யா முழுமையாக 4 ஓவர்களை வீசியே தீருவேன் என இருக்கிறார். முழு நேரமாக பவுலிங்கிற்கு வந்தவர்களெல்லாம் ஒரு ஓவர், இரண்டு ஓவர்கள் என வீசிவிட்டு வேலையின்றி நிற்கின்றனர். குறிப்பாக லக்னோ களம் அதிகம் ஸ்பின் ஆன போதும் யுவேந்திர சாஹலுக்கு 2 ஓவர்கள் தான் தரப்பட்டன. ஆனால் பாண்ட்யா 4 ஓவர்களை போட்டுக்கொண்டார்.
பேட்டிங் ஆசை
பேட்டிங்கிலும் 6வது அல்லது 7வது வரிசையில் களமிறங்கி வந்த பாண்ட்யா தற்போதெல்லாம் 4வது அல்லது 5வது இடத்தில் விளையாடவே விரும்புகிறார். தீபக் ஹூடா போன்ற பேட்ஸ்மேன் டாப் ஆர்டரில் விளையாடக்கூடியவர். ஆனால் அவரை பின்னுக்கு தள்ளிவிட்டு, இவர் முன்கூட்டி விளையாடுகிறார். இது தான் முதல் டி20ல் தோல்வியடைந்ததற்கும் காரணமாக பார்க்கப்பட்டது.
தொடர் நாயகன் விருது
பாண்ட்யாவின் இந்த செயல்களுக்கு விளைவு நியூசிலாந்து தொடரின் நயாகன் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக 66 ரன்கள், 5 விக்கெட்கள், 2 கேட்ச்-களை பிடித்ததற்காக தொடர் நாயகன் விருதை கொடுத்தனர். ஒருவேளை மற்ற பவுலர்கள் மற்றும் பேட்ஸ்மேன்களை முழுமையாக பணி செய்யவிட்டிருந்தால், இந்த விருது கிடைத்திருக்குமா என்பது சந்தேகம் தான்.