2வது இன்னிங்சில் இந்தியா
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையில் சிட்னியில் 3வது டெஸ்ட் போட்டி கடந்த 7ம் தேதி துவங்கி நடைபெற்று வரும் நிலையில், 407 ரன்களை இலக்காக கொண்டு இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி தனது ஆட்டத்தை இன்று துவங்கியுள்ளது.
துவக்க வீரர்கள் பார்ட்னர்ஷிப்
இதில் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் சிறப்பான துவக்கத்தை இந்திய அணிக்கு அளித்துள்ளனர். இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப்பில் 71 ரன்களை அடித்துள்ளனர். இந்நிலையில் 52 ரன்களை அடித்த நிலையில் இன்றைய 4வது நாள் ஆட்டத்தின் இறுதியில் ரோகித் சர்மா அவுட்டானார்.
2 விக்கெட்டுகள் இழப்பு
4வது நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 98 ரன்களுக்கு ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்துள்ளது. நாளை காலை 4.30 மணிக்கு தனது ஆட்டத்தை இந்திய அணி வீரர்கள் தொடரவுள்ளனர். இந்நிலையில் ரோகித் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்தியுள்ளது மிகுந்த ஆசுவாசத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆஸ்திரேலிய கோச் ஜஸ்டின் லாங்கர் மகிழ்ச்சி தெரிவிததுள்ளார்.
ரோகித் அவுட்டானது மகிழ்ச்சி
உலக தரத்திலான வீரர் ரோகித் சர்மாவின் விக்கெட்டை ஆஸ்திரேலிய பௌலர்கள் வீழ்த்தியுள்ளது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் மிகச்சிறந்த வீரர் என்பதை சுட்டிக் காட்டியுள்ள லாங்கர், அவர் விக்கெட்டை எடுக்காமல் இருந்திருந்தால் நாளைய போட்டியில் அவர் அதிவிரைவாக ரன்களை குவித்திருப்பார் என்றும் கூறியுள்ளார்.