வலிமையை காட்டுகிறது.. பட்ஜெட்டுக்கு இடையே திடீரென இந்திய அணியை பாராட்டிய நிர்மலா.. என்ன சொன்னார்?
டெல்லி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வெற்றி குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் பேசினார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். பொருளாதார மந்த நிலையில் நிலவி வரும் இந்த சமயத்தில் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் இந்த பட்ஜெட் அதிக கவனம் ஈர்த்துள்ளது.
கவர்ச்சிகரமான அறிவிப்புகள், தனியார்மயம் தொடர்பான அறிவிப்புகள், புதிய பொருளாதார கொள்கைகள், திட்டங்கள் குறித்த நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பேசி வருகிறார். இதில் அவர் குறிப்பிட்ட ஒரு விஷயம் பெரிய அளவில் கவனம் ஈர்த்து உள்ளது.

திருக்குறள்
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு என்ற குறளை குறிப்பிட்டு நிர்மலா சீதாராமன் கவனம் ஈர்த்தார். இது போக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கிரிக்கெட் தொடர் வெற்றி குறித்தும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டு இருந்தார். இந்திய அணியின் வெற்றியை பாராட்டும் வகையில் நிர்மலா சீதாராமன் பேசி இருந்தார்.

என்ன சொன்னார்
நிர்மலா சீதாராமன் தனது உரையில், உலக அளவில் இந்தியா வலிமை மிக்க நாடாக உருவெடுத்து உள்ளது. இந்தியா நம்பிக்கை நாடாக திகழ்கிறது. நமது வலிமையை ஒவ்வொரு துறையிலும் பறைசாற்றி வருகிறோம்.

ஆஸி. நாடுகள்
பார்டர் கவாஸ்கர் கோப்பையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அவர்களின் சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி அடைந்த வெற்றி, நமது வலிமையை காட்டுகிறது. உலக நாடுகளால் நம்பிக்கைக்குரிய நாடாக, மக்களாக நாம் உருவெடுத்து இருக்கிறோம். இதை நினைத்து நாம் பெருமை கொள்ள வேண்டும், என்று நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.

பட்ஜெட்
பட்ஜெட் தாக்கலுக்கு இடையே திடீரென நிர்மலா சீதாராமன் இந்திய அணியின் வெற்றி குறித்து பேசிய வரவேற்பை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை 2 -1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றுள்ளது. இரண்டாவது முறையாக தொடர்ச்சியாக பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

பாராட்டு
அதிலும் கப்பா மைதானத்தில் ஆஸ்திரேலியாவை 32 ஆண்டுகளுக்கு பின் வீழ்த்திய அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் இந்த வெற்றியை நேற்று பிரதமர் மோடி மான் கீ பாத் நிகழ்ச்சியில் பாராட்டிய நிலையில் இன்று நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலின் போதும் பாராட்டி உள்ளார்.


Click it and Unblock the Notifications