இந்திய அணியில் எதற்கு ராகுல்.. கில், சாம்சனுக்கு வாய்ப்பு கொடுங்கள்.. பாக். வீரர் சொன்ன கருத்து!
டெல்லி: இந்திய அணியில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கேஎல் ராகுலுக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட்டுவிட்டதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கனேரியா தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின் இந்திய அணியில் சீனியர்கள் வீரர்கள், தற்காப்பாக விளையாடும் வீரர்களை ஒதுக்க வேண்டும் என்று எண்ணம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
இந்திய டி20 கிரிக்கெட் அணியில் ஹர்திக் பாண்டியா தலைமையில் அச்சமின்றி விளையாடும் இளம் வீரர்களை கொண்ட அணியை கட்டமைக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் ரோஹித் ஷர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, அஸ்வின் உள்ளிட்ட வீரர்களை ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு என்று ஒதுக்க வேண்டும் என்ற கருத்துக்கள் அதிகமாகியுள்ளது.

ரசிகர்கள் கோரிக்கை
2015ம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடருக்கு பின் இங்கிலாந்து அணியில் செய்யப்பட்ட அதிரடி மாற்றங்களை போல் இந்திய அணியில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், டி20 கிரிக்கெட்டுக்கு என்று பிரத்யேக தேர்வு குழு அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

சுப்மன் கில் தேவை
இந்த நிலையில் இந்திய டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் கேஎல் ராகுல் தேவையில்லை என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் கனேரியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து கனேரியா கூறுகையில், 2023ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான உலகக்கோப்பையை மனதில் வைத்து சுப்மன் கில்லுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். சுப்மன் கில் மிகச்சிறந்த வீரராக உருவாகி வருகிறார்.

கனேரியா கருத்து
அதேபோல் ஒருநாள் அணிக்கு ரோஹித் ஷர்மா கேப்டனாக நீடிக்க வேண்டும். ஆனால் உலகக்கோப்பையை வெல்ல ரோஹித் ஷர்மாவுக்கு நல்ல வீரர்கள் தேவையாக இருக்கின்றனர். கேஎல் ராகுலுக்கு இந்திய கிரிக்கெட் அணியில் போதுமான வாய்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. தொடர் வாய்ப்புகள் வழங்கப்பட்டும், அவர் நிரூபிக்கவில்லை. தொடர்ந்து ரன் குவிக்க முடியாமல் திணறி வருகிறார். அதனால் இந்திய அணி கில், சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கேஎல் ராகுல் தேவையில்லை
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கேஎல் ராகுல் 6 போட்டிகளில் தொடக்க வீரர்களாக விளையாடி 128 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இன்னும் முக்கியமான விவகாரம் என்னவென்றால், டி20 உலகக்கோப்பையில் அவரின் ஸ்ட்ரைக் ரேட் 120.75 மட்டுமே. ஐபிஎல் தொடரின் போது ஸ்ட்ரைக் ரேட் பற்றி கவலையில்லை என்றும், அது ஓவர் ரேடட் என்றும் கேஎல் ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications