மும்பை : இந்திய அணியின் மோசமான செயல்பாடுகளால், இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி அடைந்து 0-2 என டெஸ்ட் தொடரில் பின்தங்கி உள்ளது.
எஞ்சியுள்ள மூன்று போட்டிகளிலும் வென்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும் என்ற நிலையில் இருக்கும் இந்திய அணியில், பெரிய அளவில் மாற்றம் செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்திய அணியில் தற்போது தொடக்க வீரர்கள் தவான், முரளி விஜய், ராகுல் என மூவரும் இரண்டு போட்டிகளிலும் ரன் குவிக்கவில்லை. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதைப் போல, இவர்கள் முதலில் வெளியேறிய உடன் அடுத்து வரும் மிடில் ஆர்டர், தொடக்க வீரர்களின் விக்கெட்கள் வீழ்ந்த அழுத்தத்தையும், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சின் தாக்கத்தையும் சமாளிக்க முடியாமல் சரணடைந்து விடுகின்றனர். யாரவது ஒரு தொடக்க வீரர் நன்றாக ரன் சேர்த்தால் கூட, மற்றவர்கள் சுதாரிக்க அது வாய்ப்பாக இருக்கும்.
அதே போல, இங்கிலாந்தில் ரஹானே, தினேஷ் கார்த்திக் என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் சொல்லிக் கொள்ளும்படி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. மற்றொரு அனுபவ வீரரான ரோஹித் சர்மா ஏற்கனவே அணியில் சேர்க்கப்படவில்லை. கோஹ்லியை மட்டுமே நம்பி அணி இருக்கிறது.
அனுபவ வீரர்கள் தங்களை நிரூபிக்க தவறிய நிலையில், இளம் வீரர்களான ப்ரித்வி ஷா, மாயன்க் அகர்வால், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், கருண் நாயர், ஹனுமா விகாரி உள்ளிட்ட ஏராளமான இளம் வீரர்கள் முதல் தர போட்டிகள், ஐபிஎல் போன்ற உள்ளூர் தொடர்களில் ரன் குவித்து, தங்கள் திறமையை வெளிப்படுத்திவிட்டு தங்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காதா? என ஏங்கிக் கிடக்கின்றனர்.
முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கும் உத்தேச வீரர்கள் அறிவிக்கப்பட்டு, அதில் இருந்து தான் களத்தில் ஆடும் பதினோரு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். எனவே, மூன்றாவது போட்டியில் எந்த பெரிய மாற்றமும் செய்ய வாய்ப்பில்லை. கடைசி இரண்டு போட்டிகளுக்குமான அணி இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. அனேகமாக, அடுத்த வாரத்தில் அந்த அணித்தேர்வு நடைபெறும் என கூறப்படுகிறது. எனவே, அந்த அணித் தேர்வின் போது இவர்களில் சிலருக்காவது, வாய்ப்பு வழங்க வேண்டும்.