வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா
இந்த நிலையில் தொடரின் 4வது லீக் ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் இன்று மோதுகின்றன. தனது தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசத்தை எளிதாக வீழ்த்திய இந்திய அணி, இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தால் இறுதி சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ளலாம்.
பவுலிங் பிட்ச்
இந்த ஆடுகளத்தில் அதிகப்படியாக ரன் குவிப்பது எளிதான காரியம் அல்ல. 150 ரன்கள் எடுத்தாலே அதை விரட்டிப்பிடிப்பது கடினம். இதை உணர்ந்து இந்திய பேட்ஸ்மேன்கள் நிதானமாக ஆடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.
பேட்டிங் அவசியம்
முதலாவது ஆட்டத்தில் ரோகித் ஷர்மா, ஹர்திக் பாண்ட்யா மட்டும் பேட்டிங்கில் முத்திரை பதித்தனர். மற்ற பேட்ஸ்மேன்களும் இந்த ஆட்டத்தில் கைகொடுத்தால், பாகிஸ்தானை விழிபிதுங்க வைத்து விடலாம்.
ரோகித் ஷர்மா கருத்து
ரோகித் ஷர்மா கூறுகையில், பாகிஸ்தான் அணி பந்து வீச்சில் வலுவானது. ஆனால் நாங்கள் எங்களது பலத்துக்கு ஏற்ப தயார்படுத்துவதில் கவனம் செலுத்த விரும்புகிறோம். எங்களது பலம் பேட்டிங் தான். ஆடுகளத்தன்மை எப்படி இருக்கும் என்பதையும் பார்க்க வேண்டும். ஒவ்வொரு அணியும் ஏதாவது ஒன்றில் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அவர்களிடம் சிறந்த இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். அதே போல் நம்மிடம் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர் என்றார்.
அனுபவ பாகிஸ்தான்
பாகிஸ்தான் வீரர்கள், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய அனுபவத்தோடு வந்து இருக்கிறார்கள். சூதாட்டத்தில் சிக்கி 5 ஆண்டு கால தடைக்கு பிறகு அணிக்குள் நுழைந்திருக்கும் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
பாகிஸ்தானுக்கு பவுலிங்
பாகிஸ்தான் கேப்டன் அப்ரிடி நேற்று நிருபர்களிடம் கூறும் போது, ‘இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களுக்கும், இந்திய பேட்ஸ்மேன்களுக்கும் இடையிலான போராட்டமாக இருக்கும். இங்குள்ள சூழலில் வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள்.
பவுலிங் மீது அப்ரிடி நம்பிக்கை
எங்களிடம் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை கொண்டவர்கள். இந்திய பேட்ஸ்மேன்களை சீக்கிரமே வெளியேற்றி முதல் 6 ஓவர்களை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் முயற்சிப்பார்கள். இந்திய அணி பேட்டிங் வரிசையில் வலிமையானது என்பதை அறிவேன். ஆனால் நாங்கள் வலுவான பந்து வீச்சு தாக்குதலை கொண்டுள்ளோம். ஆட்டத்தின் முடிவு எங்களுக்கு நல்லதாக அமையும் என்று நம்புகிறேன்' என்றார்.
ரசிகர்கள் ஆவல்
நீண்ட இடைவெளிக்கு பிறகு பரம எதிரிகள் மல்லுகட்டும் இந்த ஆட்டத்தை காண உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இதனால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
இந்தியா ஆதிக்கம்
இந்தியா - பாகிஸ்தான்கள் அணிகள் இதுவரை 6 டி20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 4-ல் இந்தியாவும், ஒன்றில் பாகிஸ்தானும் வெற்றி பெற்றிருக்கின்றன. ஒரு ஆட்டம் ‘டை' ஆனது.
கடைசி போட்டியிலும் வெற்றி
ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி கடைசியாக பாகிஸ்தானை 2015-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையில் சந்தித்தது. அந்த ஆட்டத்தில் இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்து இருந்தது.
நேரடி ஒளிபரப்பு
இரவு 7 மணிக்கு தொடங்கும் இன்றைய டி20 ஆட்டத்தை, தூர்தர்ஷன் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.