பதற்றம் இல்லாமல் ஆடும் தோனி
தோனி ஐந்தாம் மற்றும் ஆறாம் வரிசையில் பேட்டிங் இறங்கி பல போட்டிகளில் இந்திய அணியை வெற்றி பெற வைத்துள்ளார். குறிப்பாக சேஸிங்கில் அவர் அத்தனை அழுத்தத்துக்கு நடுவே பதற்றம் இல்லாமல் நின்று ஆடுவார்.
முழு நேர பினிஷர்
ராகுல் டிராவிட் கேப்டன் பதவியை பெற்ற பின் தான் தோனி முழு நேர பினிஷராக மாறினார். அதற்கு முன் அவர் மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்து பாகிஸ்தான் அணிக்கு எதிராக 148 ரன்களும், இலங்கை அணிக்கு எதிராக 183 ரன்களும் அடித்து இருந்தார்.
முடிவை பற்றி கவலையே இல்லாதவர்
இந்த நிலையில் தோனி குறித்து ராகுல் டிராவிட், சஞ்சய் மஞ்ச்ரேக்கர் எடுத்த பேட்டியில் பேசினார். அப்போது தோனியின் பினிஷிங் குறித்து அவர் பேசினார். தோனி பினிஷிங் செய்து ஆடும் போது முடிவை பற்றி கவலையே இல்லாதவர் போல ஆடுவார் என குறிப்பிட்டார்.
வியப்பு
"போட்டியின் முடிவில் தோனியின் ஆட்டம் சிறப்பாக இருப்பதை நாம் பார்க்கும் போது அவர் அவருக்கு மிக முக்கியமான விஷயத்தை செய்கிறார் என்று தான் நினைப்போம். ஆனால், அவர் போட்டியின் முடிவு முக்கியம் அல்ல என்பது போலத் தான் ஆடுவார்" என தன் வியப்பை வெளிப்படுத்தினார் ராகுல் டிராவிட்.
எனக்கு அது இல்லை
"அது அத்தனை எளிதான சூழல் அல்ல. அது உங்களுக்கு உள்ளேயே இருக்க வேண்டும் அல்லது அதற்காக பயிற்சி செய்து இருக்க வேண்டும். எனக்கு அது நிச்சயம் இல்லை. எனக்கு ஒரு விஷயத்தை செய்யும் போது அதன் முடிவுகள் மிகவும் முக்கியம்." என்றார் டிராவிட்.
தோனியிடம் கேட்க வேண்டும்
மேலும், "இது தோனிக்கு இயல்பாகவே வந்ததா அல்லது அவர் இதை கற்றுக் கொண்டாரா என்பதை கேட்க வேண்டும். அது சுவாரசியமானதாக இருக்கும். பெரிய பினிஷர்கள் தங்களை அந்த மனநிலையில் வைத்துக் கொள்ள முடியும்." என்றார் ராகுல் டிராவிட்.
சேஸிங்கில் தோனி
வெற்றிகரமான ரன் சேஸிங்கில் தோனி 2876 ரன்கள் குவித்துள்ளார். அதில் அவரது சராசரி 102.71 ஆகும். பதற்றமின்றி அவர் சேஸிங் ஆடும் விதம் கிரிக்கெட் உலகில் பல இளம் வீரர்களின் கனவு ஆட்டமாக உள்ளது. பலர் தாங்கள் தோனி போல பினிஷராக வர வேண்டும் எனவும் கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.