கேப்டவுன்: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்)க்கின் 2வது டுவென்டி 20 போட்டியையொட்டி அனைத்து அணிகளின் உரிமையாளர்கள், வீரர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்ட அணிவகுப்பு கேப்டவுனில் நடந்தது. நாளை முதல் போட்டிகள் தொடங்குகின்றன.
கேப்டவுன் நகரின் மையப் பகுதி வழியாக இந்த கண்கவர் ஊர்வலம் நடந்தது. இதை ஆயிரக்கணக்கான மக்கள் சாலைகளின் இரு மருங்கிலும் கூடியிருந்து பார்த்து ரசித்தனர்.
இந்த அணிவகுப்பில் இந்திய திரையுலகினர் பலரும் கலந்து கொண்டனர்.
59 நாட்கள் நடக்கவுள்ள ஐபிஎல்-2 டுவென்டி 20 போட்டிகள் நாளை முதல் தொடங்குகின்றன.
தேர்தலுக்குள் நடத்தியே ஆக வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் ஒற்றைக் காலி்ல் நின்றது. ஆனால், தேர்தல் பாதுகாப்புதான் முக்கியமானது என்று மத்திய அரசு கூறி விட்டது. இதையடுத்து தென் ஆப்பிரிக்காவுக்கு போட்டிகளை மாற்றி விட்டது ஐபிஎல் நிர்வாகம்.
நேற்று நடந்த அணிவகுப்பில் கொல்கத்தா அணியின் உரிமையாளரான ஷாருக் கான், பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர் ஷில்பா ஷெட்டி ஆகியோரும் கலந்து கொண்டனர். இவர்களைப் பார்க்கத்தான் மக்கள் பெரும் ஆர்வம் காட்டினர்.
பெருமளவில் மக்கள் திரண்டு நின்று ஐபிஎல் அணிவகுப்பைப் பார்வையிட்டதை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் வீரரான டேவிட் வார்னரை வியப்பி்ல ஆழ்த்தியது.
ஐபிஎல் அணியின் வீரர்கள், அந்த அணிகளின் பயிற்சியாளர்களாக உள்ள பல முன்னாள் வீரரர்களும் அணிவகுப்பின்போது கலந்து கொண்டனர்.
அனைத்து எட்டு அணிகளின் கேப்டன்கள், வீரர்கள் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர்.
முதல் போட்டியில் சென்னை - மும்பை மோதல்
நாளை கேப்டவுனில் நடைபெறும் முதல் போட்டி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இதில் டோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சச்சின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.
பின்னர் இரவு 8 மணிக்கு பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இந்த இரு போட்டிகளுக்கும் முன்பாக தொடக்க விழா நடைபெறவுள்ளது. முதல் தொடக்க விழாவைப் போலவே இதுவும் கண்கவர் கலை நிகழ்வாக அமையும்.
ஐபிஎல் போட்டிகள் அனைத்தையும் செட்மேக்ஸ் டிவி நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
மிஸ் ஆன வீரர்கள்:
முதலாவது ஐபிஎல் தொடரில் பங்கேற்ற பல வீரர்கள் 2வது தொடரில் பங்கேற்கவில்லை.
பல்வேறு போட்டிகளில் ஆடி சோர்வடைந்து விட்டதால் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பான்டிங், மைக்கேல் ஹூசே ஆகியோர் இப்போட்டித் தொடரில் பங்கேற்கவில்லை.
கடந்த ஆண்டு நடந்த போட்டித் தொடரில் கொல்கத்த நைட் ரைடர்ஸ் அணிக்காக 4 லட்சம் டாலருக்கு ஏலம் போனவர் பான்டிங்.
ஹூசேவை சென்னை அணி 3.50 லட்சம் டாலருக்கு ஏலம் எடுத்தது.
அதேபோல மைக்கேல் கிளார்க், மிட்சல் ஜான்சன் ஆகியோரும் 2வது தொடரில் பங்கேற்க மாட்டார்கள்.
அதேபோல இங்கிலாந்து வீரர்களான கெவின் பீட்டர்சன், ஆன்ட்ரூ பிளின்டாப்பும் பங்கேற்க மாட்டார்கள்.
ஓவைஸ் ஷா, பால் காலிங்வுட் ஆகிய இங்கிலாந்து வீரர்களும் இந்தத் தொடரில் பங்கேற்கவில்லை.
மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல், பிடல் எட்வர்ஸட்ஸ் ஆகியோர் 2 வாரங்களுக்கு விளையாடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரெட் லீ மற்றும் ஆன்ட்ரூ சைமன்ட்ஸ் ஆகியோர் முழு தொடரும் விளையாடுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பிரெட் லீ, ஏப்ரல் 22 முதல் மே 7 வரை நடைபெறவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் பங்கேற்கப் போகிறார்.
அதேபோல சைமன்ட்ஸும் ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ளதால் கடைசி இரு வாரங்களுக்கு மட்டும் ஐபிஎல் போட்டிகளில் ஆடுவார்.
கடந்த போட்டித் தொடரின் சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் ஷான் வாட்சன், மே 7ம் தேதி வரை விளையாட வர மாட்டார்.
பாகிஸ்தான் வீரர்களுக்குத்தான் இந்த ஐபிஎல் தொடரில் இடம் இல்லாமல் போய் விட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் மோசமாகியிருப்பதால் பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.