மும்பை: "இந்தி" வெறியை தெரிந்தோ தெரியாமலோ வெளிக் காட்டி விட்டு இப்போது அதற்கு ஆங்காங்கே கண்டனங்கள் எழ ஆரம்பித்து விட்டதைத் தொடர்ந்து அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமைப் பயிற்சியாளர் பணிக்கு ஆளெடுக்கும் வேலையில் இறங்கியுள்ளது பிசிசிஐ. இதற்காக ஒரு விளம்பரத்தையும் அது வெளியிட்டுள்ளது. அதில் இந்தி மற்றும் இதர இந்திய மொழிகள் தெரிந்திருப்பது விருப்பத்துக்குரியது என்று ஒரு அம்சத்தை அது சேர்த்துள்ளது.
இந்திய மொழிகள் என்று பொதுவாகப் போடாமல் அது என்ன இந்தி மற்றும் என்று போடுவது என்று சமூக வலைதளங்களில் பிசிசிஐ குறித்து விமர்சனங்கள் எழத் தொடங்கின. இந்திய கிரிக்கெட் வாரியம் தனது இந்திப் பாசத்தையும், இந்தி வெறியையும் வெளிக் காட்டியுள்ளதாகவும் கண்டனங்கள் வரத் தொடங்கின.
இது நாள் வரை இந்தி வெறியை விடாமல் கைப்பிடித்து வந்ததுதான் இந்திய கிரிக்கெட் வாரியம். இந்திய தெரியாத யாருக்குமே இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்பே இல்லை. ஆங்கிலம் கூட தெரியாமல் இருக்கலாம். ஆனால் இந்தி "மஸ்ட்"! இந்த நிலையில் தற்போது முதல் முறையாக இந்தியை வெளிப்படையாகவே ஒரு கண்டிஷனாக அது போட்டிருந்தது பெரும் சலசலப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
இத்தனைக்கும் இந்தி தேசிய மொழியே கிடையாது (உச்சநீதிமன்றமே சொல்லியிருக்கிறது). அப்படி இருக்கும்போது இந்தி மற்றும் பிற என்று போட்டு இந்திக்கு ஏன் பிசிசிஐ சிறப்பிடம் கொடுத்தது என்ற சர்ச்சையும் கிளம்பியுள்ளது. இதையடுத்து பிசிசிஐ விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அது அனுப்பியுள்ள விளக்கத்தில், ஒரு சர்வதேச அணியின் தலைமைப் பயிற்சியாளருக்குத் தேவையான முழுமையான தகவல் தொடர்பு திறமைகளுடன் கூடிய பயிற்சியாளரையே நாங்கள் தேடி வருகிறோம். வீரர்களுடன் சரியான முறையில் கலந்துரையாடத் தேவையான, வீரர்களிடம் தனது கருத்தை சரியான முறையில் கொண்டு செல்லக் கூடிய திறமையுடன் கூடிய, ஆங்கிலப் புலமை பெற்ற தலைமைப் பயிற்சியாளரைத் தேடி வருகிறோம்.
அதேசமயம், இந்திய மொழி ஒன்றைத் தெரிந்திருந்தால் அது விருப்பத்துக்குரியது என்றுதான் சொல்லியுள்ளோம். அதேசமயம், இந்திய மொழி ஒன்றை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. இந்திய மொழி தெரிந்திருக்க வேண்டும் என்பது கட்டயாம் அல்ல என்று விளக்கியுள்ளது பிசிசிஐ. மேலும் அது புதிதாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்தி என்ற வார்த்தையையும் நீக்கியுள்ளது.