காபூல்: விளையாட்டு போட்டிகள் என்பது எப்போதும் வெறும் விளையாட்டாக மட்டுமே இருந்ததுமில்லை, இனி எப்போதும் இருக்கப்போவதுமில்லை. அதிகாரத்திற்கு எதிராக ஒடுக்கப்பட்ட குழுக்களின் எழுச்சி எப்போதும் அவர்கள் விளையாடும் விளையாட்டுக்கள் மூலமே நிகழ்ந்துள்ளது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் உலக வரைபடத்தில் பாதியை தன்னுடைய கட்டுக்குள் வைத்திருந்த இங்கிலாந்தின் ஆதிக்கத்தை ஆஸ்திரேலியா அசைத்துப் பார்க்கவே, ஆஷஸ் எனும் தொடர் பிறந்தது வரலாறு. அதன் பின்பு பல்வேறு வருடங்கள் கழித்து, மேற்கிந்திய தீவுகளிலிருந்து 'கறுப்பர்கள்' என கிட்டத்தட்ட உலகமே ஒதுக்கிவைத்த ஒரு குழு இருபது ஆண்டுகளுக்கு மேலாக கிரிக்கெட் உலகையே வென்றுத் தீர்த்தது.
அதன் பின்பு, இவர்களையெல்லாம் அசால்ட்டாக எப்போதும் வென்றுவிடலாம் என ஆசிய அணிகளை ஏளனமாக பார்த்த காலம் மாறி, தற்போது உலகின் தலை சிறந்த வீரர்கள் அனைவரும் வருடத்தில் இரண்டு மாதங்கள் ஐபிஎல் போட்டிகளில் பங்குபெற இந்தியா வருகிறார்கள் என்பதே அதிகாரத்தை வென்றெடுத்த மிகப்பெரிய சான்றுகளில் ஒன்று.
ஆஃப்கானிஸ்தான் எனும் தேசம் பல்வேறு அடிகளை வாங்கிய வண்ணம் இருந்தாலும், அவர்களுக்குள்ளே இருக்கும் போராட்ட உணர்வும், என்ன ஆனாலும் சரி, வாழ்ந்து பார்த்துவிட வேண்டுமென்கிற வெறியும், உலக மக்கள் அனைவரும் கற்க வேண்டிய ஆகச்சிறந்த பாடம். பொட்டல் காடுகளே மைதானங்கள், கிடைக்கும் மட்டைகளே அவர்களுக்கு MRF பேட்டுகள். ஐசிசி விதிமுறைகளுக்குள் அடங்கவே அடங்காது என நினைத்த தேசத்திலிருந்து இன்று கிரிக்கெட் உலகமே மெச்சும் படி வீரர்கள் வந்துக்கொண்டே இருக்கிறார்கள்.
'அசோசியேட்' தேசங்களுக்கான தொடர்களில் நன்றாக செயல்பட்ட ஆஃப்கானிஸ்தான், கொஞ்சம் கொஞ்சமாக வெற்றிகளை குவித்தது. அதற்கு முதல் காரணம் அவர்களது கேப்டன் முகமது நபி, விக்கட் கீப்பர் ஷஷாத் என தங்களை நிலைநிறுத்திக்கொள்ள, அதன் பின்பு ரஷீத் கான், முஜ்பீர் என வரிசையாக அட்டகாசமான வீரர்கள் வெளியே வர, ஐபிஎல் போன்ற டி 20 லீக் தொடர்களில் உலகமெங்கும் பயணிக்க ஆரம்பித்தார்கள்.
முதல் தலைமுறை வீரர்கள் உலகையே வெல்லக்கூடியவர்களாக இருந்தால்தான் அவர்களைக் கண்டு அடுத்தடுத்த தலைமுறைகளிலும் முன்னவர்களை விட அதிகம் சாதிக்க வேண்டும் என்கிற வேட்கையில் போராடத் துவங்குவார்கள். சச்சினை ஆதர்ஷமாக கொண்டு, எங்கோ ஒரு மூலையில் ராஞ்சி என்கிற இடத்தில் தோனி பேட்டைத் தொட்டதால் தான் இன்று அந்த மாநிலமே தனிப்பெருமை அடைந்து நிற்கிறது. இது சுனில் கவாஸ்கரை தொடர்நத சச்சினுக்கும், சச்சினை தொடரும் கோஹ்லிக்கும், நாளை கோஹ்லியை மிஞ்சவிருக்கும் ஷுப்மன் கில் போன்றவர்களுக்கும் பொருந்தும்.
தங்களுடைய சொந்த மண்ணில் தங்களுக்கென தனி மைதானம் கூட இல்லாத வீரர்களை பிசிசிஐ டெல்லியை அடுத்துள்ள நொய்டா மைதானத்தில் அவர்கள் பயிற்சி பெற ஏதுவாக ஏற்பாடுகளை செய்துளளது. அடுத்த வருடத்திற்கான உலககோப்பைக்கு தகுதிபெறும் போட்டிகளில் எதிர்பாராத விதத்தில் முதலில் சொதப்பினாலும், பின்பு மழையின் புண்ணியத்தாலும், இறுதி ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகளை வென்று சாதனைப் படைத்தது, நாங்களும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என அறிவிக்க வந்துவிட்டார்கள்.
ஐசிசி 104 நாடுகளுக்கு டி 20 அந்தஸ்த்தை சமீபத்தில் வழங்கியது நினைவிருக்கலாம். ஆஃப்கானிஸ்தான் போன்று இன்னும் பல்வேறு ஆப்ரிக்க தேசங்கள் தங்களுடைய இருப்பை இந்த உலகிற்கு தெரிவிக்க கிரிக்கெட் பெரிய உதவியாக இருக்கக்கூடும். எவ்வாறு கால்பந்தாட்டத்தில் 'கானா' போன்ற சிறிய நாடுகள் உலகத்தின் பார்வையை தங்கள் மீது திருப்பியதோ, கிரிக்கெட்டின் மூலம் இன்னும் சில நாடுகள் மேலெழவேண்டும். இது நிச்சயம் நடக்கும்.