சிதைத்த சேவாக்
வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் நேற்று பஞ்சாப்பை எதிர்கொண்டது சென்னை அணி. வழக்கம்போல பஞ்சாப் பேட்டிங்கில் பட்டையை கிளப்பி 226 ரன்களை குவித்தது. 'ரன் உபயம் வீரேந்திரசேவாக்' என்று மைதானத்தில் எழுதிபோடவில்லை. மற்றபடி சதம் அடித்து சென்னை பவுலர்களைசிதைத்துவிட்டார் சேவாக்.
சளைக்காமல் ஆடிய சென்னை
பெரிய ஸ்கோர்தான் என்றாலும் 'சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன்' போல சென்னையும் வரிந்து கட்டி அடித்தது. ஸ்கோர் பார்முலா ஒன் கார்போல கிடுகிடுவென உயர்ந்தது.
ரெய்னாவை பலி கொடுத்த மெக்கல்லம்
அதிலும் 25 பந்துகளில் ரெய்னா 87 ரன் அடித்து சீறும் சிங்கமாக காட்சியளித்தபோது, பஞ்சாப் அணி வயிற்றில் புளி கரைந்தது. அப்போதுதான் அந்த புண்ணியகாரியத்தை செய்தார் நியூசிலாந்து இறக்குமதியான பிரண்டன் மெக்கல்லம். அப்படியும், இப்படியுமா, ஓடுவதுபோல பாவலா செய்து ரெய்னாவை ரன் அவுட்டுக்கு பலி கொடுத்தார் மெக்கல்லம். ஒருவகையில் பஞ்சாப்புக்கு இந்தாண்டின் மிகப்பெரிய உதவியை செய்தார் மெக்கல்லம்.
அட.. அவரும் அப்படியே அவுட்
ரெய்னா ரன் அவுட் ஆனதும் தலையில் கைவைத்து உட்கார்ந்துவிட்டனர் சென்னை ரசிகர்கள். மெக்கல்லமும் அதிரடி ஆட்டக்காரர்தானே இந்த முக்கியமான தருணத்தில் அணிக்கு கைகொடுப்பார் என்று எதிர்பார்த்து திரையில் விழிவைத்து காத்திருந்தனர் ரசிகர்கள். ஆனால் 16 பந்தில் 11ரன் மட்டுமே எடுத்த மெக்கல்லமும் ரன் அவுட் ஆகி கடுப்பேற்றினார்.
டோணி சிக்ஸ் அடிச்சும் எதிரணிக்கு வெற்றி
மிடில் ஆர்டர் பெயிலாக இவ்விரு ரன் அவுட்டுகளும்தான் காரணமாகிவிட்டது. இறுதியில் கேப்டன் டோணி வந்தும் இமாலய ஸ்கோருக்கு முன்பு எதுவும் செய்ய முடியவில்லை. இறுதி பந்து வரை களத்தில் இருந்த டோணி கடைசி பந்தை சிக்சருக்கும் விரட்டினார். எப்போதும் கடைசி பந்தை டோணி சிக்சருக்கு தூக்கினால் அப்போது அவரது அணிதான் வெற்றி பெறும். ஆனால் இம்முறை டோணியின் சிக்சருக்கு எதிரணிதான் மகிழ்ச்சியடைந்தது.
மனுஷங்களா இவங்கெல்லாம்..
பந்தையத்துக்கு பிறகு நொந்துபோய் டிவி வர்ணணையாளரிடம் டோணி பேசியபோது வழக்கத்துக்கு மாறாக அவரது பேச்சில் அனல் தெறித்தது. "சில சர்வதேச விளையாட்டு வீரர்கள் பொறுப்பற்றதனமாக ஆடியதால்தான் தோல்வியடைய நேரிட்டது. ரெய்னா ஆடிய விதத்தை பார்க்கும்போது, நாங்கள் வெற்றி பெறுவோம் என்றுதான் நம்பிக்கொண்டிருந்தோம். இந்த பொறுப்பற்ற ஆட்டத்தால்தான் மிடில் ஆர்டர் சரிந்து தோல்வியை பெற வேண்டியதாயிற்று" என்று ஓப்பனர் டுப்ளிசியையும், குறிப்பாக மெக்கல்லத்தையும் வாட்டினார் டோணி.
வந்து வாய்ச்சிருக்குங்க பாரு..
சென்னை பந்து வீச்சாளர்கள் மீதும் கடுமையான கோபத்தில் டோணி இருப்பது அவரது பேச்சில் தெரிந்தது. "சென்னைகிட்ட இருக்கிற பவுலர்களை எதிரணி வீரர்கள் அடித்து நொறுக்காவிட்டால்தான் அது ஆச்சரியம். பஞ்சாப் எப்படியும் வழக்கம்போல 200 ரன்னை கடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அதே நேரம் பஞ்சாப் பேட்ஸ்மேன்களுக்கு அந்த பெருமையை அளித்தே ஆக வேண்டும்" என்றார். சென்னையுடனான இந்த சீசனின் மூன்று பந்தையங்களிலும் பஞ்சாப் 200 ரன்னுக்கு மேல்தான் எடுத்திருந்தது. இதுதான் டோணியின் கோபத்துக்கு காரணம்.
டாட்டா காட்டிய மெக்கல்லம்
ஜூன் 8ம்தேதி மேற்கிந்திய தீவுகள் மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு நடுவேயான டெஸ்ட் பந்தையம் ஆரம்பிக்கிறது. சென்னை பைனலுக்கு சென்றிருந்தால், மெக்கல்லத்தை மே.இந்திய தீவுகளுக்கு எதிரான நியூசிலாந்து அணியில் சேர்த்துக்கொள்ள வாய்ப்பில்லாமல் இருந்தது. முன்கூட்டியே சென்னை வெளியேறியதால் மெக்கல்லத்துக்கு மே.இந்திய சுற்றுப்பயணத்தில் வாய்ப்பு கொடுக்கப்பட உள்ளது. அவர் டாட்டா காட்டிவிட்டார். ஆனால் சென்னை ரசிகர்கள்தான் மெக்கல்லம் மீது கொலைவெறியில் உள்ளனர்.