பெங்களூர்: உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்று போட்டியில் ஓமனிடம் இந்தியா அணி போராடி தோல்வியடைந்தது.
2018ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்று ஆட்டம் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியா-ஓமன் அணிகள் மோதின.
முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் இந்திய அணி, நேபாளத்தை வென்று இருந்ததால், பலமான ஓமன் அணியையும் இந்தியா வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.
ஆனால், ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே ஓமனின் காசிம் கோல் அடித்து அந்த அணிக்கு முன்னனியை பெற்று தந்தார். கோல் அடிப்பதற்காக கடுமையாக போராடி ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் நட்சத்திர ஸ்ட்ரைக்கர் சேத்ரியின் அற்புதமான கோலால் ஆட்டத்தை 1-1 என்று சமநிலைப்படுத்தியது இந்தியா.
இருந்த போதிலும் ஆட்டத்தின் 40வது நிமிடத்தில் ஓமன் மற்றோரு கோலை அடித்து திரும்பவும் முன்னிலை பெற்றது. அதன் பிறகு இந்திய அணியின் கோல் அடிக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தது. இறுதியில் 2-1 கணக்கில் ஓமன் வெற்றி பெற்றது.