டெல்லி: ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இந்திய கால்பந்து அணிகளை அனுப்புவதில்லை என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் முடிவு எடுத்துள்ளது. அதற்கு அவர்கள் கூறும் காரணம் தான், இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த விளக்கம்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜகார்த்தாவில் ஆகஸ்ட் 18ல் துவங்குகிறது. இதில் பங்கேற்பதற்கான பல்வேறு விளையாட்டுகளுக்கான அணிகள் மற்றும் வீரர்களை இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்து வருகிறது. ஆனால், இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கால்பந்து அணியை அனுப்புவதில்லை என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் முடிவு செய்துள்ளது.
அதற்கு முக்கிய காரணம், ஆசிய தரவரிசையில் 8 இடங்களுக்குள் உள்ள விளையாட்டு அணிகளை மட்டுமே அனுப்ப முடிவு செய்துள்ளதுதான். கால்பந்து ஆடவர் அணி 14வது இடத்திலும், மகளிர் அணி 13வது இடத்திலும் உள்ளன.
இந்த முடிவுக்கு இந்திய கால்பந்து கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்திய கால்பந்து அணி கடந்த மூன்று ஆண்டுகளில் மிகப் பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளது. உலகத் தரவரிசையில் 173வது இடத்தில் இருந்து 97வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இதைத் தவிர உலகக் கோப்பைக்கான ஆசிய அளவிலான தகுதிச் சுற்றுப் போட்டியில் விளையாடுவதற்கான தகுதியும் பெற்றுள்ளது. ஆசிய விளையாட்டு போன்ற சர்வதேச போட்டிகளில் பங்கேற்றால்தான் வீரர்களுக்கு அனுபவம் கிடைக்கும். வெற்றி வாய்ப்பு என்ற அடிப்படையில் வீரர்களை அனுப்பக் கூடாது என்று கூட்டமைப்பு கூறியுள்ளது.
ஆனால், இதற்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் எந்த பதிலையும் கூறவில்லை. இந்த முடிவு விளையாட்டு வீரர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.