இறுதிப்போட்டியில் மோதல்
தென்னாப்பிரிக்காவின் போட்செப்ஸ்ட்ரோமில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐசிசி அன்டர் 19 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இதில் போட்டியின் இடையிலும் மற்றும் இறுதியிலும் இந்திய வீரர்களை வங்கதேச அணியினர் சீண்டியபடியே இருந்தனர். இந்த சம்பவங்களால் பார்வையாளர்களிடையேயும் சலசலப்பு ஏற்பட்டது.
சக்சேனா தலையை குறிபார்த்த பந்து
டாஸ் வென்று பந்துவீச்சை தேர்ந்தெடுத்த வங்கதேச அணி வீரர்கள் ஆக்ரோஷத்துடன் போட்டியை எதிர்கொண்டனர். இந்திய துவக்க ஆட்டக்காரர் சக்சேனா தலையை குறிவைத்து வங்கதேச பௌலர் சாகிப் பந்தை எறிந்தார். இதனால் சக்சேனா வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் அம்பயர் சமாதானம் செய்தார்.
கடுப்பான இந்திய வீரர்கள்
இதேபோல வங்கதேச வீரர் ஷோரிபுல் இஸ்லாம் ஆட்டத்தின் இடையில் தொடர்ந்து வசவு வார்த்தைகளை பிரயோகித்து வந்தார். இதனால் இந்திய வீரர்கள் கடுப்பாகினர். இதேபோல ஜெய்ஸ்வால் 88 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியபோதும், ஷோரிபுல், அவரை சீண்டும்வகையில் சைகை செய்தார். தொடர்ந்து பேட்டிங் செய்யும்போதும் ஷோரிபுல் இஸ்லாமின் சைகைகள் மோசமாக இருந்தன.
கீழே தள்ளி மோதல்
இருதரப்பு வீரர்களின் இந்த சீண்டல்கள் பார்வையாளர்களிடமும் எதிரொலித்தது. ஒரு கட்டத்தில் இருநாட்டு ரசிகர்களும் தங்களுக்குள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கூச்சல் போட்டனர். இதனால் மைதானம் முழுமையுமே பரபரப்பாக இருந்தது. தொடர்ந்து போட்டி முடிவுற்றவுடன், வங்கதேச வீரரின் வசவு வார்த்தையை அடுத்து இந்திய வீரர்கள் அவரை கீழே தள்ளிவிட்டதில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அம்பயர்கள் அவர்களை சமாதானம் செய்து விலக்கி அழைத்து செல்லும் நிலை ஏற்பட்டது.
ஐசிசி அதிரடி
இந்நிலையில் இந்த மோதலுக்கு காரணமானவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்ட ஐசிசி, ஐசிசியின் 2.21 விதியை மீறியதாக வங்கதேச வீரர்கள் முகமது தொவ்ஹித் ஹிரிதோய், ஷமிம் ஹுசைன், ராக்கிபுல் ஹாசன் ஆகியோரையும் இந்திய வீரர்கள் ஆகாஷ் சிங் மற்றும் ரவி பிஸ்னோய் ஆகியோரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்திய வீரர் ரவி பிஸ்னோய் ஆட்டத்தின்போது தவறான சைகைகளை பிரயோகித்ததாக இரண்டாவது முறையாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஐசிசி பொது மேலாளர் கருத்து
அன்டர் 19 உலக கோப்பைக்கான இறுதிப்போட்டியில் டென்ஷன் என்பது இயல்பானதுதான் என்று ஐசிசி பொது மேலாளர் தெரிவித்துள்ளார். ஆனால், இறுதிப்போட்டியின்போது சில வீரர்களின் மரியாதை குறைவான நடவடிக்கை என்பது கிரிக்கெட்டில் இருக்க கூடாதது. மரியாதை என்பது கிரிக்கெட்டில் மிகவும் முக்கியமானது என்று கூறியுள்ள அவர், தங்களது வெற்றியை கொண்டாடுவது போலவேஎதிரணியினருக்கு வாழ்த்துக்கூறுவதும் மிகவும் முக்கியமானது என்று தெரிவித்துள்ளார்.