மும்பை: முன்னாள் வீரர்கள் இணைந்து உருவாக்கியுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்துக்கு பிசிசிஐ அனுமதி வழங்கி இருக்கிறது.
ஆஸ்திரேலியா போன்ற பிரபல நாடுகளில் கிரிக்கெட் வீரர்களின் நலன்களுக்காகவும், பாதுகாப்புக்காகவும் என்று தனியாக கிரிக்கெட் நலவாரிய சங்கம் உள்ளது. அதனை முன் மாதிரியாக வைத்து, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் இணைந்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் என்ற அமைப்பைத் தொடங்கினார்கள்.
ஆனால் இதை இந்திய கிரிக்கெட் வாரியம் இதுநாள்வரை அங்கீகரிக்காமல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தற்போது பிசிசிஐ கிரிக்கெட் வீரர்களுக்கான இந்த சங்கத்தினை அதிகாரபூர்வமாக அமைத்துள்ளது.
இது நேரடியாக பிசிசிஐ கண்காணிப்பில் இருக்கும். பெரும் சிக்கலையும், தலை குனிவையும் சூதாட்ட பிரச்சனை தொடர்பாக விசாரணை நடத்திய ஓய்வு பெற்ற லோதா குழு பல்வேறு பரிந்துரைகளை இந்த சங்கத்துக்கு அமல்படுத்த கோரியது. அதன் அடிப்படையாக கொண்டு, இந்த சங்கத்திற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த சங்கம் இன்னும் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கத்துடன் இணைக்கப் படவில்லை. புதிதாக தேர்தல் நடத்தும் வரை இச்சங்கத்திற்கு இயக்குனர்களாக கபில்தேவ், அகர்கர் மற்றும் சாந்தா ரங்கசாமி அவர்கள் இருப்பார்கள் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.