டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிசிசிஐ தனது ஊழியர்களை தங்களது வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தன்னுடைய வீட்டில் இருந்து தன்னுடைய பணியை தொடர்ந்துவரும் பிசிசிஐ தலைவர் கங்குலி, மாலை 5 மணிக்கு லவுஞ்சில் ரிலாக்சாக அமர்ந்த சந்தோஷத்தை இறுதியாக எப்போது அனுபவித்தேன் என்று நினைவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்த மாதம் 29ம் தேதி துவங்கவிருந்த ஐபிஎல் தொடர் 2020 அடுத்த மாதம் 15ம் தேதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்த இறுதி முடிவு எடுப்பதற்கு ஒருவார கால அவகாசம் தேவைப்படுவதாக கங்குலி குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பீதி உலகெங்கிலும் அதன் பாதிப்பைவிட மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் அதன் பாதிப்பிலிருந்து விடுபட பல்வேறு நாடுகளிலும் பலவித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் பலவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு வழிமுறைகளை உலக சுகாதார அமைப்பும் அறிவுறுத்தியுள்ளது.
மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் கூடுமானவரையில் வீட்டைவிட்டு வெளியில் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல வணிக நிறுவனங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. பல நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு பணியாளர்கள் வீடுகளில் இருந்தே வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கொரோனாவின் தாக்கம் ஒருபுறம் இருந்தாலும், குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவழிக்க தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளதாக பல தரப்பினரும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு 150ஐ தொட்டுள்ளது. இந்தியாவின் அடையாளமாக மாறியுள்ள ஐபிஎல் தொடர் இந்த மாதம் 29ம் தேதி துவங்கவிருந்த நிலையில், தற்போது அடுத்த மாதம் 15ம் தேதிக்கு அது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திட்டமிட்ட தேதிக்கு பிறகு 15 நாட்கள் கழித்து துவங்கவுள்ளதால் போட்டிகள் குறைக்கப்படலாம் என்று முன்னதாக கங்குலி தெரிவித்துள்ளார். இதன் மொத்த திட்டம் குறித்து அறிவிக்க குறைந்தபட்சம் ஒருவார காலமாவது தேவைப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.
View this post on InstagramA post shared by SOURAV GANGULY (@souravganguly) on
இந்நிலையில் ஐபிஎல் தொடர் செப்டம்பர் மாதத்திற்கு தள்ளிவைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே, பிசிசிஐ தனது ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய பணித்துள்ளது. இதையடுத்து சவுரவ் கங்குலியும் தனது வீட்டிலிருந்தே தனது பணிகளை தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒருபுறமிருந்தாலும், மாலை 5 மணியளவில் லவுஞ்சில் ரிலாக்சாக அமர்வது மிகவும் மகிழ்ச்சியை அளிப்பதாகவும், இறுதியாக தான் இந்த சந்தோஷத்தை எப்போது அனுபவித்தேன் என்பது ஞாபகமில்லை என்றும் தெரிவித்துள்ளார். கூடவே தன்னுடைய புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.