ஜிம்பாப்வே அணியில் கேரி பேலன்ஸ்
ஆனால் தற்போது இங்கிலாந்து அணி வீரரான கேரி பேலன்ஸ் ஜிம்பாப்வே நாட்டுக்காக கிரிக்கெட் விளையாட இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 33 வயதாகும் கேரி பேலன்ஸ், கடந்த 2013ம் ஆண்டில் இங்கிலாந்து அணி சார்பில் விளையாட சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். கடைசியாக கடந்த 2017 ஜூலை வரை இங்கிலாந்து அணிக்காக விளையாடினார்.
இங்கிலாந்து அணியில் கேரி பேலன்ஸ்
இடது கை பேட்ஸ்மேனான கேரி பேலன்ஸ்-க்கு பின்னர் இங்கிலாந்து அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதுவரை இங்கிலாந்து அணிக்காக 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,498 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல் 16 ஒருநாள் போட்டிகளிலும் பங்கேற்று விளையாடி உள்ளார். தற்போது ஜிம்பாப்வே அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள கேரி பேலன்ஸ்-ன் சொந்த நாடு ஜிம்பாப்வே தான்.
கேரி பேலன்ஸ் பிறப்பு
1989ல் ஜிம்பாப்வே நாட்டில் பிறந்த கேரி பேலன்ஸ், அந்த நாட்டில் பல்வேறு வயது பிரிவில் கிரிக்கெட் விளையாடி உள்ளார். அவரது பெற்றோர் அங்கு விவசாயம் செய்து வந்துள்ளனர். 2006 அண்டர் 19 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி ஆட்ட நாயகன் விருதை வென்றார். பின்னர் அதே ஆண்டு இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்து உள்ளூர் அளவில் கிரிக்கெட் விளையாட தொடங்கினார்.
கேரி பேலன்ஸ் ஆட்டம்
அவரது அசத்தலான ஆட்டம் காரணமாக இங்கிலாந்து அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றார். 2013 முதல் 2017 வரையில் ஆஷஸ் தொடர் உட்பட சில முக்கிய தொடர்களில் பேலன்ஸ் விளையாடி உள்ளார். இருப்பினும் அணிக்குள் நிரந்தர இடம் கிடைக்கவில்லை. அவர் பதிவு செய்துள்ள நான்கு டெஸ்ட் கிரிக்கெட் சதங்களில் இரண்டு இந்திய அணிக்கு எதிராக அடிக்கப்பட்டவை
இனவெறி புகார்
கடந்த ஆண்டு சக யார்க்ஷயர் அணி வீரரை நிறவெறி ரீதியாக சாடியதாக அவர் மீது புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து அவர் இங்கிலாந்து அணிக்காக விளையாடும் வாய்ப்பை இழந்தார். யார்க்ஷயர் அணியில் இருந்து ஒப்பந்த காலம் முடிவதற்கு முன்பாகவே கேரி பேலன்ஸ் விடுவிக்கப்பட்டார். இந்த சூழலில் அவர் ஜிம்பாப்வே அணிக்காக சர்வதேச களத்தில் விளையாட உள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.