முதல் போட்டி
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1 -0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி 317 ரன்களை பேட்டிங்கில் குவித்தது, அதே போல பவுலிங்கில் இங்கிலாந்து அணியை 251 ரன்களுக்குள் சுருட்டி இந்திய அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.
சஹால்
இந்நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய அணியில் யுஸ்வேந்திர சஹாலுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து சேவாக் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார். சஹால் நடந்து முடிந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் 3 போட்டிகளில் பங்கேற்றார். ஆனால் அவர் பெரிய அளவில் சோபிக்கவில்லை. முதல் 2 டி20ல் 40க்கும் அதிகமான ரன்களும், 3வது போட்டியில் 30க்கும் அதிகமான ரன்களையும் விட்டுக்கொடுத்தார். 3 போட்டிகளிலும் தலா ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்திருந்தார். இதனால் அவர் நேற்றைய முதல் ஒரு நாள் போட்டியில் வெளியில் அமரவைக்கப்பட்டார்.
ஒருதலைபட்சம்
இதுகுறித்து பேசிய சேவாக், பந்துவீச்சாளர் சஹால் 3 போட்டிகளில் சரியாக ஆடவில்லை என்பதால் அவரை கோலி உட்காரவைதார். ஆனால் டி20 தொடரில் தொடர்ந்து சொதப்பிய கே.எல்.ராகுலுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுக்கிறார். ஏன் இந்த ஒருதலைபட்சம்?. இதுவே பந்துவீச்சில் பும்ரா இப்படி சரியாக செயல்படாமல் போயிருந்தால், அவருக்கு வாய்ப்பு வழங்காமல் இருந்திருப்பார்களா? அவர் சிறந்த பவுலர், நிச்சயம் கம்பேக் கொடுப்பார் எனக்கூறி விராட் கோலி வாய்ப்பு கொடுப்பார்.
வாய்ப்பு தேவை
இங்கிலாந்து தொடரில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வந்த ரிஷப் பண்ட்-க்கு பதிலாக ஒரு நாள் போட்டியில் கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட கே.எல்.ராகுல். 43 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். அதே போல் சஹாலுக்கு பதிலாக களமிறங்கிய குல்தீப் யாதவ் 9 ஓவர்கள் வீசி 68 ரன்களை விட்டுக்கொடுத்தார். எனினும் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சஹாலுக்கும் ராகுலை போன்று மீண்டும் வாய்ப்பு கொடுக்கவேண்டும் என விமர்சனம் வலுத்துவருகிறது.