இந்திய கிரிக்கெட்டில் புதிய கலாசாரம்
இந்தியாவில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் மைதானங்களில் முன்னாள் வீரர்கள் மணியடித்து போட்டியை தொடங்கி வைக்கும் கலாசாரம் துவங்கி உள்ளது. மும்பையில் நடந்த போட்டியில் சச்சினும், கவுஹாத்தியில் நடந்த போட்டியில் கங்குலியும் மணியடித்து போட்டியை தொடங்கி வைத்தனர். அதே போல கொல்கத்தா போட்டியில் முகமது அசாருதீன் மணியடித்து போட்டியை தொடங்கி வைத்தார்.
பிசிசிஐ தடையும், நீதிமன்ற தீர்ப்பும்
கடந்த 2000ஆம் ஆண்டில் அசாருதீன் மீது மேட்ச் பிக்ஸிங் புகார் எழுந்தது. அதில் பிசிசிஐ அவருக்கு வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் ஆட தடை விதித்தது. எனினும்இந்த விவகாரத்தில், ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றத்தில் அசாருதீன் வழக்கு தொடர்ந்து தனக்கு சாதகமான தீர்ப்பை பெற்றார். பிசிசிஐ அந்த தீர்ப்பை எதிர்க்கவில்லை.
|
பிசிசிஐ தோற்று விட்டது
இந்நிலையில், எப்படி மேட்ச் பிக்ஸிங் புகாரில் தடை செய்யப்பட்ட ஒருவருக்கு அங்கீகாரம் அளித்து, அவருக்கு கௌரவம் அளிக்கப்பட்டது? என கேள்வி எழுப்பியுள்ளார் கம்பீர். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், "இந்தியா ஈடன் கார்டன் மைதானத்தில் வென்று விட்டது. ஆனால், பிசிசிஐ மற்றும் கொல்கத்தா கிரிக்கெட் அமைப்பு தோற்று விட்டது" என குறிப்பிட்டுள்ளார்.
கம்பீர் புகார் எடுபடுமா?
கம்பீர் பொதுவாகவே மேட்ச் பிக்ஸிங் புகார் எழுந்தவர்களை மைதானத்துக்குள் விடக் கூடாது. அவர்களுக்கு எந்த பதவியும் கொடுக்கக் கூடாது என பல்வேறு சமயங்களில் தன் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அது போலவே இப்போதும் பொங்கி எழுந்துள்ளார் கம்பீர். எனினும், இதை பிசிசிஐ அல்லது மற்ற கிரிக்கெட் அமைப்புகள் பெரிதாக எடுத்துக் கொள்ளுமா என்பது சந்தேகமே. கம்பீர் தேர்தல் சமயத்தில் பாஜக-வில் இணைய உள்ளார் என வதந்திகள் உலா வருவதும் குறிப்பிடத்தக்கது.