அடுத்தடுத்து 4வது தோல்வி
இலங்கை இந்த ஆண்டில் மட்டும் தனது நாட்டில் நடந்த நான்கு டெஸ்ட் தொடர்களில் தோல்வியைத் தழுவி தொடரை இழந்துள்ளது. இதுவரை இப்படி எந்த ஆண்டிலும் அது மண்ணைக் கவ்வியதில்லையாம்.
அதிலும் 3.. இதிலும் 3
இந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் முதல் இரு இடங்களிலும் இலங்கை வீரர்களே இருந்தாலும் கூட டாப் 5 பட்டியலில் 3 பேர் இந்திய வீரர்கள்தான். அதேபோ பந்து வீச்சிலும் டாப் 5 வீரர்களில் 3 பேர் இந்திய வீரர்கள் ஆவர்.
அஸ்வின் -மிஸ்ராவுக்கு 36 விக்கெட்கள்
இந்தத் தொடரில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வினும், அமீத் மிஸ்ராவும் இணைந்து 36 விக்கெட்களைக் காலி செய்தனர். இதில் அஸ்வினின் பங்கு 21, மிஸ்ராவுக்குக் கிடைத்தது 15 ஆகும்.
2வது பெஸ்ட் சுழற்பந்து வீச்சு
கடந்த 1988-89 தொடரின்போது இந்தியா நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் நியூசிலாந்தின் 60 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தது. அப்போது இந்தியாவின் அர்ஷத் அயூப் - நரேந்திர ஹிர்வானி சுழல் இணை 41 விக்கெட்களை வீழ்த்தியிருந்தது. அதற்கு அடுத்து இந்திய சுழல் இணையின் சிறப்பான பந்து வீச்சு இதுதான்.
2011க்குப் பிறகு முதல் வெற்றி
இந்தியா வெளிநாடு ஒன்றில் டெஸ்ட் தொடரை வென்றது கடைசியாக 2011ல்தான் நடந்திருந்தது. அப்போது மேற்கு இந்தியத் தீவுகளை 1-0 என்ற கணக்கில் இந்தியா வென்றிருந்தது. அதன் பிறகு அயல்நாட்டில் வெற்றியே கிட்டியதில்லை. இப்போதுதான் வென்றுள்ளது.
5வது தொடர் வெற்றி
அயல்நாடு ஒன்றில் இந்தியா, 2 அல்லது 3 போட்டிகளை வென்று தொடரையம் கைப்பற்றியது இது 5வது முறையாகும்.
முதலில் தோற்று தொடரை வென்றது முதல் முறை
இதுவரை வெளிநாடு ஒன்றில் இந்தியா முதல் டெஸ்ட் போட்டியிலேயே தோற்று பின்னர் மீண்டு வந்து தொடரை வென்றதாக சரித்திரம் இல்லை. அந்த சரித்திரத்தை இந்தத் தொடரில் மாற்றி எழுதியுள்ளது இந்தியா.
மேத்யூஸின் சாதனை வேதனை
இலங்கை கேப்டன் மேத்யூஸ், 4வது இன்னிங்ஸில் சதமடிப்பது இது 4வது முறையாகும். ஆனால் இவரது சதங்கள் அந்த அணிக்கு பலன் தந்ததில்லை.
அதிக பந்துகளைச் சாப்பிட்ட மேத்யூஸ்
மேத்யூஸ் 110 ரன்களை எடுக்க 240 பந்துகளைச் சாப்பிட்டார். கொழும்பு சிங்களீஸ் மைதானத்தில் சதம் போட அதிக பந்துகளை எடுத்துக் கொண்டதில் இது 5வது நிகழ்வாகும்.
4வது இந்திய வேகப் புயல்
டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 அல்லது அதற்கு மேல் எடுத்த 4வது இந்திய வேகப் பந்து வீச்சாளராக இஷாந்த் சர்மா உருவெடுத்துள்ளார். இதற்கு முன்பு கபில் தேவ் (434), ஸ்ரீநாத் (236), ஜாகீர் கான் (311) சாதித்துள்ளனர்.
கும்ப்ளேவுக்கு அடுத்து அஸ்வின்
இதற்கு முன்பு இந்திய சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளேதான் ஒரு வெளிநாட்டுத் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளராக இருந்தார். அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2003-04 தொடரின்போது 24 விக்கெட்களைச் சாய்த்திருந்தார். தற்போது 21 விக்கெட்களைச் சாய்த்து 2வது இடத்தைப் பிடித்துள்ளார் அஸ்வின்.
கும்ப்ளேவை வீழ்த்திய அஸ்வின்
அதேசமயம், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஒன்றில் அதிக விக்கெட் சாய்த்த கும்ப்ளே சாதனையை அஸ்வின் முறியடித்துள்ளார். கும்ப்ளே 2005-06 தொடரில் இலங்கைக்கு எதிராக 20 விக்கெட் சாய்த்திருந்தார். அதை தற்போது ஒரு விக்கெட் கூட எடுத்து முறியடித்துள்ளார் அஸ்வின்.
அஸ்வின் செம சராசரி
இந்தத் தொடரில் அஸ்வினின் பந்து வீச்சு சராசரி 18.09 ஆக இருந்தது. இதற்கு முன்பு எர்ரபள்ளி பிரசன்னா 24 விக்கெட் வீழ்த்தி 18.79 சராசரி வைத்திருந்ததே சாதனையாக இருந்தது.