சௌதாம்ப்டன் : இந்தியா, இங்கிலாந்துக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி இறுதிக் கட்டத்தை எட்ட உள்ளது. இங்கிலாந்து தன் இரண்டாவது இன்னிங்க்ஸில் 233 ரன்கள் முன்னிலை பெற்று 8 விக்கெட்கள் இழந்து ஆடி வருகிறது.
இந்தியா தன் இரண்டாம் இன்னிங்க்ஸில் 250 ரன்களுக்கும் மேல் துரத்திப் பிடிக்க வேண்டிய நிலையில் அது சாத்தியமா? என்பது குறித்து தன் கருத்தை தெரிவித்து இருக்கிறார் கவாஸ்கர்.
கடைசியாக பேட்டிங் செய்வது கடினம் :
இந்த ஆடுகளத்தில் முதல் இரண்டு நாட்களில் 20 விக்கெட்கள் வீழ்ந்துள்ளன. இந்த நிலையில் நான்காவது இன்னிங்க்ஸாக இந்தியா ஆட வரும். அப்போது ஆடுகளம் பந்துவீச்சுக்கு மேலும் சாதகமாகும். ஆடுகளத்தில் இருக்கும் சிறிய சிதைவுகள் காரணமாக சுழல் பந்துவீச்சுக்கும் ஒத்துழைக்கும் எனக் கூறியுள்ளார் கவாஸ்கர். எனவே, இந்தியா அப்போது பேட்டிங் செய்வது அவ்வளவு எளிதாக இருக்காது என தெரிவித்துள்ளார்.
மொயீன் அலியின் சுழல் மிரட்டல் :
இந்தியாவின் முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங்கில் மொயீன் அலி தன் சுழல் பந்துவீச்சு மூலம் 5 விக்கெட்கள் எடுத்தார். சுழலுக்கு ஒத்துழைக்காத ஆடுகளத்தில் அவர் ஐந்து விக்கெட் எடுத்து இருப்பது இந்தியாவுக்கு தான் ஆபத்து என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் சொதப்பும் இந்திய பேட்டிங் :
இந்தியாவின் பேட்டிங்கை பொறுத்தவரை மூன்றாவது போட்டியில் அனைத்து பேட்ஸ்மேன்களும் தங்கள் பங்களிப்பை அளித்தார்கள். ஆனால், மீண்டும் நான்காவது போட்டியில், முதல் இரண்டு போட்டிகள் போல ஒரே பேட்ஸ்மேன் தான் ரன் அடித்தார். தனியாளாக புஜாரா 132 ரன்கள் எடுத்தார். கோலி 46 ரன்கள் எடுத்தது ஆறுதல் அளித்தது. எனினும், மற்ற பேட்ஸ்மேன்கள், குறிப்பாக துவக்க கூட்டணி தடுமாறி வருகிறது.
எனவே, இந்தியா 233 ரன்களுக்கும் மேல் ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் வெற்றி பெறுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.