24 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர் வெற்றி
இங்கிலாந்தில் ஒரு நாள் போட்டித் தொடரை இந்தியா கைப்பற்றுவது 24 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டோணி போட்ட செம கணக்கு...
இப்போட்டியில் முதலில் இந்தியா பவுலிங்கைத் தேர்வு செய்தது. வேகப் பந்து வீச்சுக்கு ஏற்ற தட்பவெப்ப நிலை காணப்பட்டதால் டோணி, பந்து வீச்சைத் தேர்வு செய்தார். அவரது கணக்கு கச்சிதமாக இருந்தது. புவனேஸ்வர் குமாரும், முகம்மது ஷமியும் சிறப்பாக செயல்பட்டு ஐந்து விக்கெட்களை அடுத்தடுத்துக் காலி செய்து இங்கிலாந்தை மிரட்டினர்.
23 ரன்களில் 3 விக்கெட்டைப் பறி கொடுத்த இங்கிலாந்து
வேகப் பந்து வீச்சுத் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறிய இங்கிலாந்து 23 ரன்களுக்குள் 3 விக்கெட்களைப் பறி கொடுத்தது.
மொயீன் அலி மட்டும் சிறப்பு
முன்னணி வீரர்கள் சிதறி ஓடிய நிலையில் சுழற்பந்து வீச்சாளரான மொயீன் அலி மட்டு்ம் அதிரடியாக ஆடி ரன் குவித்தார். அவர் 67 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரது புண்ணியத்தால்தான் இங்கிலாந்து அணி 200 ரன்களையே கடக்க முடிந்தது. மொயீன் அலியை அஸ்வின் பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார்.
அட்டகாச ரஹானே.. அதிரடி தவன்
இதையடுத்து மிக எளிதான வெற்றி இலக்கை இந்தியா சிறப்பாக துரத்தத் தொடங்கியது. அஜிங்கியா ரஹானேவும், ஷிகர் தவனும் சிறப்பாக ஆடினர். அதிரடியாக ஆடினர். ரஹானே மிகச் சிறப்பாக ஆடி சதம் போட்டார். ஷிகர் தவனும் 90 ரன்களைக் கடந்து குதூகலிக்க வைத்தார்.
ஆண்டர்சனை நொங்கி எடுத்த ரஹானே
ஜேம்ஸ் ஆண்டர்சனின் ஒரு ஓவரில் 4 பவண்டரிகளைப் பறக்க விட்டார் ரஹானே.. பாவம் ஜேம்ஸ் டென்ஷனாகி விட்டார்.
பந்து வீச்சா இது...
இங்கிலாந்து பந்து வீச்சு நேற்று மகா சொதப்பலாக இருந்தது. இந்திய வீரர்களை அச்சுறுத்தவே இல்லை அவர்கள். ரஹானே ஒரு நாள் போட்டியில் தனது முதல் சதத்தை நேற்றுப் பூர்த்தி செய்தார். 100 பந்துகளைச் சந்தித்த அவர் 106 ரன்Kளில் ஆட்டமிழந்தார். அவரும் தவனும் சேர்ந்து 183 ரன்களைக் குவித்தனர்.
97 ரன்கள் தவன்
அடுத்து ஷிகர் தவன் தொடர்ந்து அதிரடியாக ஆடி 97 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இலக்கை அணி தொட்டு விட்டதால் அவரால் சதம் போட முடியாமல் போனது. கோஹ்லி 1 ரன்னில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
31 ஓவரிலேயே ஓவர்....!
30.3 ஓவர்களில் இந்தியா ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 212 ரன்களைச் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியைப் பெற்றது.
3-0
தொடர்ந்து 3 போட்டிகளில் வென்ற இந்தியா, 3-0 என்ற கணக்கில் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை வென்று விட்டது. முதல் போட்டி கைவிடப்பட்டது. கடைசிப் போட்டியிலும் இந்தியா வென்றால் இங்கிலாந்தை முழுமையாக வெள்ளை அடிக்கலாம்.
அஸாருதீனுக்கு அடுத்து டோணி
கடந்த 1990ம் ஆண்டு அஸாருதீன் தலைமையிலான இந்திய அணி 2-0 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரை வென்றிருந்தது. அதற்கு முன்பும் சரி, பின்னரும் சரி இந்தியாவால் தொடரை வெல்ல முடியாமல் இருந்தது. தற்போது டோணி தலைமையிலான அணி அதைச் சாதித்துள்ளது.
லீட்சில் கடைசிப் போட்டி
அடுத்து கடைசி ஒரு நாள் போட்டி லீட்ஸ் மைதானத்தில் 5ம் தேதி அதாவது வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
அடுத்து அசத்தப் போவது ரவீந்திர ஜடேஜாவா...!
2வது போட்டியில் ரெய்னா கலக்கினார். 3வது போட்டியில் ராயுடு அசத்தினார். 4வது போட்டியில் ரஹானே மிரட்டினார். அடுத்து 5வது போட்டியில் அசரடிக்கப் போவது ரவீந்திர ஜடேஜாவா...!