ரெய்னா விலகல்
சுரேஷ் ரெய்னா 2020 ஐபிஎல் தொடர் துவங்க மூன்று வாரங்கள் இருந்த நிலையில், தொடரில் இருந்து விலகினார். அவரது விலகலால் சிஎஸ்கே அணி கடும் சிக்கலை சந்தித்தது. ஹர்பஜன் சிங்கும் விலகியதால் சரியான அணியை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டது.
மாறிய பேட்டிங் ஆர்டர்
ரெய்னா இல்லாத நிலையில் டாப் ஆர்டர் பேட்டிங் வரிசை மாறியது. ஷேன் வாட்சனுடன், முரளி விஜய் துவக்க வீரராக இறங்கி வருகிறார். பாப் டுபிளெசிஸ் மூன்றாம் வரிசையில் ரெய்னாவின் இடத்தில் ஆடி வருகிறார். ஒரே ஒரு போட்டியில் ஆடிய அம்பதி ராயுடு நான்காம் வரிசையில் ஆடினார். அவர் இல்லாத நிலையில், ஜாதவ்வை அந்த இடத்தில் ஆட வைத்துள்ளார் தோனி.
வெளிநாட்டு வீரர்கள் சிக்கல்
சிஎஸ்கே அணியில் எந்த நான்கு வெளிநாட்டு வீரர்களை ஆட வைப்பது என்பதில் தான் சிக்கல் எழுந்துள்ளது. டாப் ஆர்டரில் சிறப்பாக பேட்டிங் செய்து வரும் ஒரே வீரர் பாப் டுபிளெசிஸ். அவரை நீக்க முடியாது. ஷேன் வாட்சனை விட்டால் வேறு துவக்க வீரரும் அணியில் இல்லை. சாம் கர்ரன், ஹேசல்வுட் ஆகியோர் இல்லாவிட்டால் வேகப் பந்துவீச்சில் சிக்கல் எழும்.
சுழற்பந்துவீச்சில் குழப்பம்
சுழற் பந்துவீச்சில் ஜடேஜா, பியுஷ் சாவ்லா சிறப்பாக செயல்படவில்லை. அவர்களை விட்டால் வெளிநாட்டு சுழற் பந்துவீச்சாளர்கள் தான் சிஎஸ்கே அணியில் சரியான தேர்வாக உள்ளனர். ஆனால், ஏற்கனவே அணியில் உள்ள எந்த வெளிநாட்டு வீரரை நீக்குவது?
பாப் டுபிளெசிஸ்
கடந்த சீசனில் வேறு ஒரு வெளிநாட்டு வீரரை அணியில் தேர்வு செய்ய வேண்டும் என்றால் பாப் டுபிளெசிஸ் வெளியே அமர வைக்கப்பட்டார். அப்போது அணியில் ரெய்னா அணியில் இருந்ததால் டாப் ஆர்டர் வலுவாக இருந்தது. ஆனால், இந்த முறை ரெய்னா இடத்தை நிரப்பி வருவதே டுபிளெசிஸ் தான். அவரை நீக்க முடியாது.
அந்த இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள்
சிஎஸ்கே அணியில் ஜடேஜா, பியுஷ் சாவ்லாவை அடுத்து சிறந்த சுழற் பந்துவீச்சாளர்களாக இருப்பது இம்ரான் தாஹிர் மற்றும் மிட்செல் சான்ட்னர். அவர்கள் இருவரும் நல்ல பார்மில் உள்ளனர். ஆனாலும், வெளிநாட்டு வீரர்கள் சிக்கலால் அவர்களில் ஒருவரை கூட தோனியால் அணியில் ஆட வைக்க முடியவில்லை.
குறைந்த எகானமி
இம்ரான் தாஹிர், மிட்செல் சான்ட்னர் மிக சிறப்பான பார்மில் உள்ளனர். ஐபிஎல் தொடருக்கு முன் பங்கேற்ற கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் அவர்கள் இருவரும் குறைவான ரன்கள் கொடுத்து 5.82, 5.52 என்ற அளவில் எகானமி வைத்திருந்தனர்.
யாரை நீக்குவது?
இம்ரான் தாஹிர் அதிக விக்கெட்டும் வீழ்த்தி இருந்தார். அவரை அணியில் சேர்ப்பதாக இருந்தால் யாரை நீக்குவது என்ற கேள்வி எழுகிறது. ரெய்னா இல்லாததால் பேட்டிங் வரிசையில் கை வைக்க முடியாது. சாம் கர்ரன், ஹேசல்வுட் இருவரில் ஒருவரை நீக்கலாம்.
பிராவோவும் வருகிறார்
இதில் மற்றொரு சிக்கலும் உள்ளது. அடுத்த போட்டியில் டிவைன் பிராவோ அணியில் இணைய உள்ளார். அவருக்கு வழிவிட்டு சாம் கர்ரன், அல்லது ஹேசல்வுட் விலக வேண்டும். அதனால், இம்ரான் தாஹிர், மிட்செல் சான்ட்னர் நல்ல பார்மில் இருந்தும், அவர்களை அணியில் ஓரங்கட்டி வைத்துள்ளார் தோனி.
தோனி என்ன செய்வார்?
அடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பிராவோ களமிறங்குவது உறுதி என்ற நிலையில், இம்ரான் தாஹிர் அல்லது சான்ட்னர் அணியில் சேர்க்கப்பட வாய்ப்புகள் குறைவே. ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு அதிகம் ஒத்துழைக்கும் என்ற பட்சத்தில், மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் தேவை என்றால் மட்டுமே தோனியால் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க முடியும்.