எடின்பர்க்: இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி நேற்று தனது முதலாவது 20 ஓவர் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியை எதிர்கொண்டது. எடின்பர்க்கில் நடந்த இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பேட்டிங்கிற்கு சாதகமான எடின்பர்க்கில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அஹமத் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். துவக்க ஆட்டக்காரர்களாக பாக்கர் ஜமான் மற்றும் அஹமத் ஷாசாத் முதல் விக்கெட்டிற்கு 33 ரன்கள் சேர்த்தனர். இருவரும் முறையே தலா 21 மற்றும் 14 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அடுத்ததாக களமிறங்கிய ஹுசைன் தள்ளாட் 18 ரன்களில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 87 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் சர்பராஸ் மற்றும் சோயிப் மாலிக் தங்களது அதிரடியான அனுபவ ஆட்டத்தால் அதி விரைவாக ரன்களை சேர்த்தனர். முடிவில் பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 204 ரன்களை எடுத்தது. சர்பராஸ் கான் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 89 ரன்களை எடுத்தார். இதுவே 20 ஓவர் போட்டிகளில் அவரது அதிகபட்ச ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.