மொகாலி: இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கு இந்திய அணியில் பார்த்திவ் பட்டேல் சேர்க்கப்பட்டுள்ளார். 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது.
2 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில், இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 3வது டெஸ்ட் போட்டி வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மொகாலி மைதானத்தில் தொடங்க உள்ளது.
இந்திய டெஸ்ட் அணிக்காக தற்போது விக்கெட் கீப்பராக செயல்பட்ட விருதிமான் சாஹா காயத்தால் அவதிப்படுவதால் அவருக்கு பதிலாக பார்த்திவ் பட்டேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கம்பீருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் சேர்க்கப்பட்டுள்ளார்.
31 வயதாகும் பார்த்திவ் பட்டேல் குட்டையாக, சிறு வயது பையனை போன்ற தோற்றம் கொண்டவர். இவருக்கு 8 வருடங்களுக்கு பிறகு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியாவில் இளம் விக்கெட் கீப்பர் வீரர்கள் யாருமே கிடையாதா என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர்.
டெஸ்ட் போட்டிகளில் இருந்து டோணி ஓய்வு பெற்ற பிறகு, தேர்வு குழுவின் முதல் சாய்ஸ் விருதிமான் சாஹாவாகத்தான் இருந்தது. ஆனால் அவருக்கு மாற்று யார் என்பதை கண்டறிவதில் பிசிசிஐ தோல்வியடைந்துள்ளதையே 8 வருடத்திற்கு பிறகான பார்த்திவ் பட்டேலின் தேர்வு புடம் போட்டு காட்டுகிறது.
அதேநேரம், 19 வயதாகும் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் சிறப்பான ஃபார்மில் இருப்பதால் அவருக்கே வாய்ப்பு தந்திருக்க வேண்டும் என்று பல கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.