ரவி சாஸ்திரி
வழக்கமான கோச்சுக்கான இலக்கணத்துடன் சாஸ்திரியைப் பொருத்திப் பார்க்க முடியாது. மைக்கும் கையுமாக வலம் வருவது, லேப்டாப் பிரியர், செருமிக் கொண்டிருப்பது அவரது அடையாளம். ஜாலியாக இருப்பது அவரது இயல்பு. அதேசமயம், அவரது கிரிக்கெட் மூளை குறிப்பிடத்தக்கது, கவனிப்புக்குரியது.
டிராவிட், ஜாகீர்
டிராவிட் கிரிக்கெட்டில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு மிகச் சிறந்த ரோல் மாடல், கடின உழைப்பாளி.ஜாகீர் கானை பொருத்தவரை அவர் அதிகம் பேசாதவர் என்பது வெளியுலகுக்கு மட்டுமே பொருந்தும். ஆனால் கிரிக்கெட் களத்திலும், உடை மாற்றும் இடத்திலும் அவர் புதிய வீரர்களுக்கு நண்பராகவும், பொறுமைசாலியாகவும் இருப்பார்.
மூவரும் வெவ்வேறானவர்கள்
சாஸ்திரி, டிராவிட், ஜாகீர் இவர்கள் மூவரும் தனிப்பட்ட முறையில் அவர்களது குணங்களை ஆராய்ந்தோமேயானால் மூவரும் ஒருவருக்கொருவர் வித்தியாசமானவர்கள். ஆனால் அவர்கள் மூவருக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. அதாவது மூவருமே கடுமையாக போராடியே இத்தகைய உயரத்தை அடைந்துள்ளனர். ஆரம்பத்தில் சாஸ்திரி இடது கை ஸ்பின்னராகவும், இந்திய அணி வீரர்களில் யாருக்கு அடுத்து யார் விளையாடுவது என்ற வரிசையில் அவரது பெயர் கடைசியில் இருந்தது.
கடின உழைப்பு
ஆனால் தனது அயராத உழைப்பால் அவர் தொடக்க ஆட்டகாரராக களமிறக்கப்பட்டார். ஆஸ்திரேலிய அணியுடனான போட்டியில் 200 ரன்களை குவித்ததால் அவர் ஓய்வு பெறும் வரை அவரே முதலில் களமிறங்கினார். டிராவிட்டும் சர்வதேச கிரிக்கெட் தொடரில் கடுமையாக விளையாடி 24,177 ரன்களை குவித்துள்ளார். ஜாகீர் பல்வேறு காயங்கள் அடைந்த நிலையிலும் 593 விக்கெட்டுகளை வீழ்த்தி திறமையான பந்து வீச்சாளராக உருவெடுத்தார்.
மற்றவர்களின் அவதி புரியும்
கடுமையான போராளிகள் என்பதுதான் அவர்களிடம் உள்ள பொதுவான இயல்பு. பல்வேறு கடினமான தருணங்களை தாண்டி அவர்கள் மூவரும் பயணித்துள்ளதால் மற்றவர்களின் அவஸ்தையை நன்கு உணருவர். இனி வருங்காலங்களில் இந்தியா கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். வரும் 26-ஆம் தேதி இலங்கையுடனான தொடர் தொடங்குகிறது. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் 2018-ஆம் ஆண்டு இறுதி வரை போட்டிகளில் மோதவுள்ளன.
தொழில் நுணுக்கம்
மேற்கண்ட தொடர்களின்போது, இந்திய அணிக்கு தனிப்பட்ட முறையிலும், தொழில்நுணுக்க முறையிலும் உதவிகள் தேவைப்படும். சாஸ்திரி, டிராவிட், ஜாகீர் ஆகிய மூவரும் வீரர்களுடன் தொழில் நுணுக்கங்கள் குறித்து தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்துவர். எனவே மும்மூர்த்திகளின் போராட்டங்கள் இந்திய அணிக்கு வலுசேர்த்து 2019-இல் உலக கோப்பையை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. எனவே மூவரும் இந்திய அணிக்கு சரியான தேர்வு என்பதில் சந்தேகமே இல்லை.