ஓய்வே கிடையாது
பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அப்ரிடி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். கடந்த ஆண்டு வரை டி20 போட்டிகளில் ஆடியவர் அதன் பின் ஓய்வு பெற்று விட்டார் என்றே பலரும் கருதினார்கள். ஆனாலும், தன் 40 வயதிலும் கிரிக்கெட் ஆடி வருகிறார் அப்ரிடி.
கொரோனா மற்றும் சர்ச்சை
சில மாதங்களுக்கு முன் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அதில் இருந்து பாதிப்பின்றி மீண்டார் அவர். அதற்கு முன்னதாக அவர் காஷ்மீர் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வந்தார். அதனால் அவர் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வந்தார்.
பாகிஸ்தான் சூப்பர் லீக்
தற்போது அவர் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் முல்தான் சுல்தான் அணிக்காக ஆடி வருகிறார். அந்த தொடரில் பிளே-ஆஃப் சுற்று கராச்சியில் நடைபெற்று வருகிறது. அதில் கராச்சி கிங்ஸ் அணிக்கு எதிராக ஆடினார் ஷாஹித் அப்ரிடி.
அந்த ஹெல்மட்
அந்தப் போட்டியில் அப்ரிடி பேட்டிங் செய்ய வந்த போது எல்லோரும் அவரது விசித்திரமான ஹெல்மட்டை பார்த்து வியந்தனர். சாதாரண ஹெல்மட் போல இருந்தாலும், முன்புறம் முகத்தை பாதுகாக்கும் கம்பிகளின் முதல் வரிசை நீக்கப்பட்டு இருந்தது.
அடிப்படை விஷயமே தவறு
பேட்ஸ்மேன்களுக்கான ஹெல்மட்டில் முன்புறம் கம்பிகள் இருப்பதே பந்துகளை முகத்தை தாக்கி விடாமல் இருக்கத் தான். அதில் சரியாக முகத்தை பாதுகாக்கும் பகுதியை நீக்கி இருந்தார் அப்ரிடி. அடிப்படை விஷயத்திலேயே தவறு செய்து இருந்தார்.
ரசிகர்கள் கிண்டல்
கிரிக்கெட் ரசிகர்கள் அப்ரிடியின் ஹெல்மட்டை கிண்டல் செய்தனர். சிலர் இதை டேஞ்சர் ஹெல்மட் என குறிப்பிட்டு இருந்தனர். ஐசிசி விதிமுறைகளை அவர் காற்றில் பறக்க விட்டுவிட்டதாகவும், இந்த ஹெல்மட்டை அவர் அணியாமலேயே ஆடி இருக்கலாம் எனவும் சிலர் கூறினர்.
மரணம்
கடந்த 2014இல் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஜஸ் பவுன்சர் பந்து தாக்கி மரணம் அடைந்தார். அப்போது முதல் கிரிக்கெட்டில் கடுமையான பாதுகாப்பு விதிமுறைகள் அமலில் உள்ளது. ஆனாலும், இன்னும் ஹெல்மட் கட்டாயம் ஆகவில்லை.
சச்சின் என்ன சொன்னார்?
சமீபத்தில் ஐபிஎல் தொடரில் பீல்டிங் செய்த வீரர் பந்தை தூக்கி எறிய அது விஜய் ஷங்கரின் கழுத்தில் பலமாக தாக்கியது. சச்சின் அப்போது ஐசிசி-யிடம் பேட்ஸ்மேன்களுக்கு ஹெல்மட்டை கட்டாயம் ஆக்க வேண்டும் என்ற விதியை அமல்படுத்த வேண்டும் என கோரினார்.