
துல்லியமான பந்துவீச்சு
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆடுகளம் ஆட்டம் தொடங்கிய சில மணி நேரம் வரை பந்துவீச்சுக்கு சாதகமாக அமைந்தது. இதனை பயன்படுத்தி கொண்ட இந்திய வீரர்கள், துல்லியமாக பந்துவீச, அதனை எதிர்கொள்ள முடியாமல் நியூசிலாந்து வீரர்கள் திணறினர். சாட் போவ்ஸ் 10 ரன்களிலும், ரச்சின் ரவிந்திர 10 ரன்களிலும், டேன் கிளவர் 4 ரன்களிலும் , கார்டர் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

167 ரன்களுக்கு ஆல்அவுட்
இதனால் நியூசிலாந்து ஏ அணி 27 ரன்கள் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து, நியூசிலாந்து வீரர் மைக்கேல் ரிப்பான் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 61 ரன்களும், ஜோ வாக்கர் 36 ரன்களும் எடுக்க, நியூசிலாந்து ஏ அணி 40.2 வது ஓவரில் 167 ரன்களில் சுருண்டது. ஷர்துல் தாக்கூர் 4 விக்கெட்டுகளையும்,குல்தீப் சென் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

ருத்துராஜ் கெய்க்வாட்
168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி வீரர்கள் களமிறங்கினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரித்வி ஷா 17 ரன்கள் எடுத்தார். சிஎஸ்கே வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் வழக்கம் போல் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தார். 54 பந்துகளை எதிர்கொண்ட அவர் 41 ரன்களை விளாசினார். இதில் 3 சிக்சர்களும், 2 பவுண்டரிகளும் அடங்கும்.

இந்தியா ஏ வெற்றி
இதே போன்று அனுபவ ஐபிஎல் வீரர் ராகுல் திரிபாதியும் அதிரடியாக விளையாடி 31 ரன்கள் சேர்த்தார். இதனையடுத்து கேப்டன் சஞ்சு சாம்சன், ரஜத் பட்டிதார் ஜோடி இணைந்து எளிதாக ஷாட்களை ஆடி ரன்களை சேர்த்தனர். இதில் பட்டிதார் 45 ரன்களும், சாம்சன் 3 சிக்சர்கள் உள்பட 29 ரன்களும் விளாச இந்திய ஏ அணி 31.5வது ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.


Click it and Unblock the Notifications











