100 மைல் மேஜிக்
வேகப் பந்துவீச்சாளர்கள் 90 மைல் என்ற அளவில் பந்து வீசுவதே சிறப்பான விஷயமாக கருதப்பட்டு வருகிறது. எந்த வேகப் பந்துவீச்சாளருக்கும் அந்த காலம் முதல், இந்த காலம் வரை இருக்கும் ஒரே கனவு 100 மைல் (160.934 கிலோமீட்டர்) வேகம் என்ற மேஜிக் எண்ணை தொடுவது தான்.
சோயப் அக்தர் தொட்டார்
அதை முதன் முதலில் தொட்டுக் காட்டியது சோயப் அக்தர் தான். சோயப் அக்தர் தான் பந்து வீசிய காலகட்டத்தில் 150 முதல் 158 கிலோமீட்டர் வேகத்தில் தான் பந்து வீசி வந்தார். அப்போது அது மிகச் சிறந்த வேகமாக இருந்தது. உலகில் வெகு சிலர் மட்டுமே அக்தருக்கு போட்டியாக பந்துவீசி வந்தனர்.
உறுதியாக இருந்தார் அக்தர்
சோயப் அக்தர் மிக நீண்ட தூரம் ஓடி வந்து பந்து வீசுவதை வழக்கமாக வைத்து இருந்தார். அதனால், அவருக்கு அதிக காயங்கள் ஏற்பட்டாலும், அதிக வேகத்தில் பந்து வீச வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அவரது வேகம் அவருக்கு விக்கெட்களை பெற்றுத் தந்தது.
அதிவேக பந்து
2002ஆம் ஆண்டு நியூசிலாந்து அணி பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தது. அப்போது ஏப்ரல் 27 அன்று லாகூரில் நடந்த ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து பேட்ஸ்மேன் கிரேய்க் மெக்மில்லனுக்கு 161.3 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசினார்.
ஐசிசி அதிர்ச்சி
100 மைல் வேகத்தை கடந்த முதல் வேகப் பந்துவீச்சாளர் என பாகிஸ்தான் ரசிகர்கள் கொண்டாடிய போது ஐசிசி அதிர்ச்சி அளித்தது. சோயப் அக்தர் 100 மைல் வேகத்தில் பந்து வீசினார் என்பதை ஒப்புக் கொள்ள முடியாது என அறிவித்தது.
ஸ்பீட்கன் கருவி சிக்கல்
அதற்கு காரணம், அந்த குறிப்பிட்ட போட்டியில் பந்துவீச்சின் வேகத்தை அளக்க பயன்படுத்தப்பட்ட ஸ்பீட்கன் கருவி, ஒரு விளம்பரதாரரால் அளிக்கப்பட்டது என்பது தான். பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு இது பற்றி விளக்கம் அளித்து சோயப் அக்தர் 161 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசினார் என கூறியது.
சாதனை ஏற்றுக் கொள்ளப்படவில்லை
ஆனால், அது கிரிக்கெட் உலகில் சாதனையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சிலர் ஸ்பீட்கன் கருவி தவறாக காட்டி இருக்கலாம் என்றார்கள். ஆனால், சோயப் அக்தர் விடவில்லை. அடுத்த ஆண்டு, யாராலும் மறுக்க முடியாத ஒரு அரங்கில் அதே சாதனையை செய்து காட்டினார்.
மீண்டும் செய்தார் அக்தர்
ஆம், 2003ஆம் ஆண்டில் நடந்த 50 ஓவர் உலகக்கோப்பையில் அந்த சாதனையை செய்தார். தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற அந்த தொடரில், இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்றது பாகிஸ்தான். பிப்ரவரி 23 நடந்த அந்தப் போட்டியில் 100.24 மைல் வேகத்தில் பந்து வீசினார்.
மறுக்க முடியாத சாதனை
உலகக்கோப்பை தொடர் என்பதால் ஐசிசி மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் இதை 100 மைல் சாதனை என ஒப்புக் கொண்டனர். ஒரே சாதனையை இரண்டு முறை செய்த பின் கிரிக்கெட் உலகம் ஒப்புக்கொண்டது. அக்தருக்கு பின் மூன்று பந்துவீச்சாளர்கள் 100 மைலை தொட்டு இருக்கிறார்கள்.
மூன்று பந்துவீச்சாளர்கள் யார்?
ஆஸ்திரேலியாவின் ஷான் டைட், பிரெட் லீ மற்றும் மிட்செல் ஸ்டார்க் 100 மைல் என்ற வேகத்தை தொட்டுள்ளனர். ஆனால், அவர்களால் அக்தர் வேகத்தை முறியடிக்க முடியவில்லை. மிட்செல் ஸ்டார்க் 0.3 மைல் என்ற அளவு வித்தியாசத்தில் நெருங்கினார்.