2வது டி20 போட்டி.. இந்தியா தோற்க காரணம், கோஹ்லி செய்த இந்த பெரிய தப்புதான்!
ராஜ்கோட்: 2வது டி20 போட்டியில் இந்திய அணி தோற்க கோஹ்லி செய்ததில் மிகப்பெரிய தப்பு இதுவாகத்தான் இருக்கும்.
முதல் டி20 போட்டியில் 53 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்ற பிறகு 40 ரன்கள் வித்தியாசத்தில் நேற்றைய 2வது டி20 போட்டியில் தோற்றுள்ளது. இது இந்திய அணிக்கு டி20 போட்டிகளில் கிடைத்த பெரிய தோல்விகளில் ஒன்றாகும்.
இந்த தோல்விக்கு டோணி பேட்டிங் ஆரம்பத்தில் செல்ஃப் எடுக்காதது, ஓப்பனிங்கில் பேட்ஸ்மேன்கள் சொதப்பியது, இந்திய பந்துவீச்சு போன்றவை முக்கிய காரணங்கள் என்றாலும், அதைவிட அதி முக்கிய காரணம் ஸ்ரேயாஷ் ஐயரை ஒன்டவுனில் களமிறக்கிய கோஹ்லியின் முடிவுதான்.

ஸ்ரேயாஷ் ஐயர் களமிறங்கினார்
பெரிய ஸ்கோரை துரத்த வேண்டிய நெருக்கடியான நேரத்தில் ஒன்டவுன் பேட்ஸ்மேன்கள் பங்களிப்பு அதிகம் தேவைப்படும். அதிலும் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் வந்த உடனே வெளியேறிய நிலையில், 22 வயதேயான புதுமுக வீரர் ஸ்ரேயாஷ் ஐயர் களமிறக்கப்பட்டது பெரும் தவறாக முடிந்தது.

கோஹ்லி வந்திருக்கலாம்
ஒன்டவுனில் கோஹ்லியே இறங்கியிருந்தால் நிலைமை வேறு மாதிரி ஆகியிருக்கும். ஸ்ரேயாஷ் ஐயர் உடனடியாக எப்படி அதிரடியாக ஆட முடியும்?. அவ்வளவு பெரிய கூட்டத்தின் நடுவே சர்வதேச போட்டிகளில் ஆடும்போது கை, கால் நடுக்கம் வரத்தானே செய்யும்.

அணியில் இடம்
ஸ்ரேயாஷ் ஐயரின் ஒரே நோக்கம் ஓரளவு ரன் சேகரித்து அணியில் தனது இருப்பை நிலைநிறுத்துவதாகவே இருக்கும். எந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும் அதைத்தான் செய்வார். அவுட்டானாலும் பரவாயில்லை, அதிரடி காட்டி வெளியேறலாம் என்று நினைக்கும் அளவுக்கா கிரிக்கெட் வீரர்கள் தியாகிகள். பல ஆயிரம் பேர் அணியில் இடம் பிடிக்க காத்திருக்கும் நிலையில், அதை ஸ்ரேயாஷ் ஐயர் எப்படி நினைத்து பார்க்காமல் இருந்திருப்பார்.

அதிரடி வீரர் தேவைப்பட்டது
ஸ்ரேயாஷ் ஐயர் 21 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார். 10 பந்துகளில் இந்த ரன்களை எடுக்க கூடிய அதிரடி பேட்ஸ்மேன் யாராவது அவர் இடத்தில் இறங்கியிருந்தால் நிலைமை காப்பாற்றப்பட்டிருக்கும். விக்கெட் சரிந்ததும் கட்டை போட்டு அணியை மீட்டெடுக்க இது டெஸ்ட் போட்டியோ, ஒன்டே போட்டியோ கிடையாது. டி20. ஒவ்வொரு பந்திலும் 4 அல்லது 6 என்பதே இங்கு இலக்கு.


Click it and Unblock the Notifications