டோணிக்கு எதிரான ரூ.6 கோடி நஷ்டஈடு வழக்கை தள்ளுபடி செய்தது கர்நாடகா ஐகோர்ட்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி. சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக இவர், அணிக்கு வந்த குறுகிய காலக்கட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் பதவிக்கு உயர்ந்தவர். தற்போது புகழின் உச்சியில் இருக்கும் டோணி, கடந்த 2006ம் ஆண்டு மைசூர் சாண்டல் சோப் தயாரிப்பாளரான கர்நாடகா சோப்ஸ் மற்றும் டிடர்ஜெண்ட் நிறுவனத்தின் விளம்பரத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் பாதியில் டோணி அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியதாக மைசூர் சாண்டல் சோப் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதில் இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடந்த 2006 ஜனவரியி்ல் டோணிக்கு ரூ.70 லட்சம் பணம் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்திய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செல்லும் முன்பாக, 10 நாட்கள் எங்கள் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்து தருவதாக டோணி உறுதி அளித்திருந்தார். ஆனால் மொத்தம் 3 நாட்கள் மட்டுமே நடித்து கொடுத்தார். எனவே மீதமுள்ள 7 நாட்களையும் நடித்து தர வேண்டும். இல்லாவிட்டால் ரூ.6 கோடி நஷ்ட வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.
இந்த வழக்கின் விசாரணை பல மாதங்களாக தொடர்ந்த நிலையில், இருத்தரப்பினரும் சமாதானமாக செல்ல முடிவு செய்தனர். இதற்காக ஓய்வுப் பெற்ற நீதிபதி ஆர்.குருராஜன் முன்னிலையில் சமரசம் பேசப்பட்டது. இதில் சோப் நிறுவனம் கூறும் மீதமுள்ள 7 நாட்களை நடித்து கொடுப்பதாக டோணி தெரிவித்தார்.
ஆனால் சோப் நிறுவனத்திற்கு தற்போது நிர்வாக மேலாளர் இல்லாததால் பின்வாங்கியது. இதனையடுத்து இந்த வழக்கு டோணிக்கு சாதகமாக, கர்நாடகா சோப்ஸ் மற்றும் டிடர்ஜெண்ட் அளித்த வழக்கை கர்நாடகா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


Click it and Unblock the Notifications