டி20 தொடர்
டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் நடந்து முடிந்தது. அஸ்வின், முரளி கார்த்திக், விஜய் ஷங்கர், தினேஷ் கார்த்திக், வாஷிங்க்டன் சுந்தர் உள்ளிட்ட இந்திய வீரர்கள் இடம் பெற்று இருப்பதால், இந்திய அளவிலும் பார்வையாளர்களை பெற்றுள்ளது இந்த தொடர்.
விபி சந்திரசேகர் மரணம்
கடந்த ஆண்டு வரை பெரிய சர்ச்சைகள் இல்லாமல் நடந்த இந்த தொடர், முதன் முறையாக இந்த ஆண்டு காஞ்சி வீரன்ஸ் அணியின் உரிமையாளரும், பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரருமான விபி சந்திரசேகர் தற்கொலையால் சர்ச்சையில் சிக்கியது. எனினும், அந்த விவகாரம் சில நாட்களில் அடங்கிப் போனது.
வீரர்கள் புகார்
இந்த நிலையில், சில வீரர்கள் தங்களை சிலர் மேட்ச் பிக்ஸிங் செய்வது தொடர்பாக சிலர் தொடர்பு கொள்ள முயன்றார்கள் என பிசிசிஐ குற்றத் தடுப்பு பிரிவுக்கு புகார் அளித்து இருந்தனர்.
வாட்ஸ் ஆப் மெசேஜ்
வீரர்கள் சிலருக்கு தெரியாத நபர்களிடம் இருந்து வாட்ஸ் ஆப் குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் மேட்ச் பிக்ஸிங் தொடர்பான விஷயங்கள் இடம் பெற்றதைக் கண்டு தான் பிசிசிஐக்கு வீரர்கள் புகார் அளித்துள்ளனர்.
தில்லுமுல்லு உறுதி
அந்த வாட்ஸ் ஆப் செய்திகள் எப்போது வந்தன, யார் அனுப்பியது என தீவிரமாக விசாரித்து வருகிறது பிசிசிஐ. அதை விசாரிக்கப் போய் பல தில்லு முல்லுகள் இருப்பதையும் கண்டு பிடித்துள்ளது.
அதிரடி விசாரணை
இதையடுத்து தீவிர விசாரணையில் குதித்துள்ள பிசிசிஐ இந்த மேட்ச் பிக்ஸிங்கில் வீரர்கள், பயிற்சியாளர்கள் சிலருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் கொண்டு உள்ளது. எனினும், வீரர்கள் பெயரை இதுவரை கூறவில்லை.
தொடர்பு இல்லை
பிசிசிஐ குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரி அஜீத் சிங் கூறுகையில், சர்வதேச போட்டிகளில் ஆடிய வீரர்களுக்கு இதில் தொடர்பு இல்லை என்பதை மட்டுமே கூறினார். அதனால், தமிழக உள்ளூர் அணிகளில் ஆடி வரும் இளம் வீரர்கள் சிலர் தான் இந்த விவகாரத்தில் சிக்கி இருக்கிறார்கள் என்பது உறுதி ஆகி உள்ளது.
பயிற்சியாளர்கள் இருக்கலாம்
மேலும், சில தகவல்களின் அடிப்படையில் சில பயிற்சியாளர்கள் மேல் விசாரணையை முடுக்கி விட்டுள்ளது பிசிசிஐ. இரு பயிற்சியாளர்கள் டிஎன்பிஎல் போன்ற டி20 தொடருக்கு பயிற்சி அளிக்க தகுதியே இல்லாமல், பயற்சியாளர்களாக இருப்பது எப்படி என அவர்கள் பற்றி விசாரித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
சிக்கலில் டிஎன்பிஎல்
ஆக மொத்தத்தில் டிஎன்பிஎல் தொடர் இடியாப்ப சிக்கலில் சிக்கி உள்ளது தெளிவாக தெரிகிறது, அரைகுறையான தகவல்கள் மட்டுமே இப்போது வெளியாகி உள்ளது. அதுவே அதிர வைக்கும் அளவில் உள்ளது. விரைவில் முழு உண்மை வெளியாகும். அப்போது டிஎன்பிஎல் தொடருக்கு தடை விதிக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை.