143 ரன்கள்
நேற்று முன்தினம் (ஆக.11) நடந்த வெளியேற்றுதல் சுற்று போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் - லைகா கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த கோவை அணியின் கங்கா ஸ்ரீதர் ராஜூ, சுரேஷ் குமார் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஸ்ரீதர் ராஜூ 17 பந்தில் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சுரேஷ் குமார் 15 பந்தில் 19 ரன்கள் எடுத்து வெளியேறினார். 3-வது வீரராக களமிறங்கிய சாய் சுதர்சன் சிறப்பான விளையாடினார். அவர் 40 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். இதில் 3 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடங்கும். மற்றபடி முகிலேஷ் 17 ரன், வெங்கடராமன் 1 ரன், கேப்டன் ஷாருக் கான் 28 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டும் எடுத்தது.
ரூபி வாரியர்ஸ்
இதையடுத்து களமிறங்கிய திண்டுக்கல் அணியில் ஓப்பனர் சுரேஷ் 9 ரன்களில் வெளியேறினாலும், கேப்டன் ஹரி நிஷாந்த் கேப்டன் நாக் இன்னிங்ஸை ஆடினார். அவர் 44 பந்துகளில் 59 எடுத்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தினார். இறுதியில் ஆர் விவேக், 26 பந்துகளில் 52 ரன்கள் விளாச 17.3வது ஓவரிலேயே 5 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது. விவேக் 6 சிக்ஸர்களை நொறுக்கி அரைசதம் அடித்தார். இந்த நிலையில் தான், இன்று (ஆக.13) நடைபெறும் மற்றொரு வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் திண்டுக்கல் அணியும், தகுதிச் சுற்றில் தோல்வி அடைந்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் மோதுகின்றன. இதில் வெற்றிப் பெறும் அணி, வரும் ஆக.15ம் தேதி சுதந்திர தினத்தன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியுடன் மோதவுள்ளது.
2-வது இடம்
இந்நிலையில், கவுசிக் காந்தி தலைமையிலான நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, ஹரி நிஷாந்த் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்சை இன்று நடைபெறும் 2வது குவாலிஃபயர் ஆட்டத்தில் எதிர்கொள்கிறது. லீக் சுற்று முடிவில் 9 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, முதலாவது தகுதி சுற்றில் 5 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சியிடம் போராடி தோற்றது. அந்த ஆட்டத்தில் கேப்டன் கவுசிக் காந்தி, விக்கெட் கீப்பர் ஜெகதீசன் இருவரும் 4-வது ஓவருக்குள் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இளம் வீரர் ராதாகிருஷ்ணன் 82 ரன்கள் சேர்த்து 150 ரன்களை கடக்க வைத்தார்.
பெரும் எதிர்பார்ப்பு
மிடில் வரிசையில் ராதாகிருஷ்ணன், சசிதேவ், ஆல்-ரவுண்டர்கள் சதீஷ், ஹரிஷ்குமார் ஆகியோர் நம்பிக்கை தந்தாலும், ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் கவுசிக் காந்தி, ஜெகதீசன் இருவரும் அபாரமான தொடக்கம் அமைப்பது அவசியம். அப்போது தான் பெரிய ஸ்கோர் குவிக்க முடியும். இதே போல் சாய் கிஷோர், சித்தார்த் ஸ்பின் பவுலிங்கும் நன்றாக ஒர்க் அவுட் ஆக வேண்டும். ஏற்கனவே லீக் சுற்றில் திண்டுக்கல் அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருப்பதால் சூப்பர் கில்லீஸ் நம்பிக்கையுடன் இன்று களமிறங்கும். சரிசம பலம் பொருந்திய இரு அணிகளும் மோதுவதால், இப்போட்டியின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. நமது தமிழ் மைக்கேல் தளத்தில் லைவ் ஸ்கோர் கார்டை காணலாம்.