ஐதராபாத் : நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மான் கில் இரட்டை சதம் விளாசியதற்கு சக அணி வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
சுப்மான் கில் இரட்டை சதம் விளாசியதை அடுத்து இந்திய அணி சார்பாக அவருக்கு சின்ன கொண்டாட்டம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது .
இதில் சுப்மான் கில் கேக் வெட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதனை தொடர்ந்து பேசிய விராட் கோலி சுப்மான் இல் விளையாடியது சிறந்த இன்னிங்ஸ் என்று தான் சொல்ல வேண்டும்.
ஏனென்றால் இந்திய அணியில் அடுத்த அதிகபட்ச ஸ்கோரே 40 ரன்கள் கூட இல்லை. இதன் மூலம் அவர் எவ்வளவு கடினமான ஆட்டத்தை விளையாடி இருக்கிறார் என்று தெரிகிறது. இந்த இரட்டை சதம் வேறொரு உயரத்தில் இருந்தது. அன்றைய ஆட்டத்தில் அவர் தனது முழு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அவரைப் பற்றி ஏன் மற்றவர்கள் உயர்த்தி பேசுகிறார்கள் என்பதை அவர் நேற்று அனைவருக்கும் காட்டி இருக்கிறார். இந்த இன்னிங்ஸை தொடர்ந்து அவர் மேலும் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே எனது ஆசை. அவர் பேட்டிங்கை பார்த்ததில் நான் பெருமையாக கருதுகிறேன் என்று விராட் கோலி கூறினார்.
இதை தொடர்ந்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா, சுப்மான் கில் ஆட்டம் பிரமிப்பை ஏற்படுத்தியது. அவர் மைதானத்திற்கு வெளியே தான் பந்தை அடித்தார். சுப்மான் கில் திறமையை அறிந்து தான் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்க நாங்கள் முடிவு எடுத்தோம். சுப்மான் கில்லை இரட்டை சதம் அடித்த கிளப்பிற்கு வரவேற்கிறேன் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.